Tuesday 25 March 2008

காதலிப்பது எப்படி? சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பாடம்!

சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு காதலிப்பது எப்படி, பெண்களைக் கவருவது எப்படி என்பது குறித்து கல்லூரி பாடத் திட்டத்தில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து கல்லூரி அளவில் காதலை ஒரு பாடமாக வைக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது காதல் பாடம் கல்லூரிகளில் அறிமுகமாகியுள்ளது.

இளநிலைப் பட்டப் படிப்பின் கடைசி செமஸ்டரில் காதல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. காதல் பாடத்தில் தேறினால் இரண்டு கிரெடிட்டுகள் கூடுதலாக வழங்கப்படும்.

காதல் பாடத்தின் கீழ், கிளுகிளுப்பான படங்களைப் பார்ப்பது, ஆண், பெண் உறவு, காதலை மையமாகக் கொண்ட பாடல்களை ஆய்வு செய்வது, பெண்கள் மற்றும் ஆண்கள் கை குலுக்கும் விதம், ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் எப்படி கவருவது உள்ளிட்டவை 'முக்கிய' அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து இசபெல் சீத் என்ற மாணவி கூறுகையில், ஒரு வாலிபன் எனது கண்களை தொடர்ந்து ஐந்து விநாடிகளுக்கு மேல் பார்த்தால், நான் அவனைக் கவர்ந்திருக்கிறேன் என்று அர்த்தம் என எனது ஆசிரியர் கூறியுள்ளார். என்னை அவன் விரும்புகிறான் என்று இதற்கு அர்த்தம் என்றும் கூறியிருக்கிறார் என்கிறார் (ரொம்ப வெள்ளந்தியா இருக்கிறாரே!)

காதல், செக்ஸ் தவிர குடும்ப வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்தும் இந்தப் பாடத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறதாம்.

கமல் பிரகாஷ் என்கிற மாணவர் கூறுகையில், இந்தப் பாடத் திட்டம், எனது பெற்றோர்களுடனான எனது நட்புறவை மேம்படுத்தியுள்ளது. இருந்தாலும் நான் இன்னும் சிங்கிள் ஆகத்தான் உள்ளேன். எந்தப் பெண்ணையும் நான் கவரவில்லை போல என்கிறார் கவலையுடன்.

இந்த பாடத் திட்டத்தின் கீழ் போதனை செய்வதற்கான ஆசிரியர்களை சமூக வளர்ச்சித் துறை கல்லூரிகளுக்கு அளிக்கும். இவர்கள் அனைவருமே கல்யாணமானவர்கள். குறிப்பாக காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல், கிளுகிளுப்பு, பெண்களைக் கவருவது குறித்துப் போதிக்க இப்போதைய தமிழ் சினிமா பாடல்களை ஒரு வாட்டி போட்டுக் காட்டினாலே போதுமே, எதற்காக பாடம், ஆசிரியர், மார்க் .....??

No comments: