Monday 31 March 2008

'தமிழகத்தில் புலிகள் ஊடுருவல் இல்லை'

தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் இல்லை என்று, தமிழக காவல் துறையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைவராக இதுவரை பதவி வகித்து வந்த ராஜேந்திரன் திங்களன்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அப்பதவிக்கு கே.பி. ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். தனது புதிய பொறுப்பை திங்களன்று அவர் ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கே.பி. ஜெயில் அளித்த பேட்டியில், தமிழக காவல்துறையை நவீனமயமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகச் சொன்னார்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாட்டினை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மின் ஆளுமை திட்டம் என்ற புதிய முறை அறிமுகமாக உள்ளது என்றார் அவர்.
தனக்கு தெரிந்த வரை தமிழகத்தில் விடுதலை புலிகள் அல்லது நக்சலைட்டுகளின் நடமாட்டமோ, ஊடுருவலோ இல்லை என்று, மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறினார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை ஒடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் டிஜிபி கே.பி. ஜெயின் மேலும் தெரிவித்தார்.

No comments: