Tuesday 29 April 2008

இலங்கை இனப்பிரச்சினை: இந்திய மத்தியஸ்த்தம் அவசியம்: கோரிக்கை வலுப்பெறுகிறது:

இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைக்கோ, நோர்வே சென்று இலங்கையின் சமாதானம் தொடர்பான மகாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் இந்தியா சென்றவுடன் பிரதமர் மன்மோகன் சிங்கை உடனடியாகவே சந்தித்தார். தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பிரதமரைச் சந்தித்து இலங்கைப் பிரச்சனை குறித்து பேசினார். பின்னர் தமிழக சட்டமன்றில் காங்கிரஸ் உள்ளிட்டு எல்லோரும் ஏகோபித்து இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கச்சதீவு குறித்து மீண்டும் பேச வேண்டும், இனப்பிரச்சனையில் இந்திய மத்தியஸ்த்தம் அவசியம் என வலியுறுத்தி வருகிறது. தமிழகக் கட்சிகளில் ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் ஜனதாதளம், தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் பங்கு அவசியம் எனக் கூறியுள்ள நிலையில் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

1 comment:

ttpian said...

why the hell ,gave 1100 crores to mahindha govt @ 2 %?