Wednesday 30 April 2008

கருவன்கேனி பிரதேசத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு பிள்ளையான் குழுவினரால் அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கருவன்கேனி பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஐ.தே.க உறுப்பினர்களுக்கு பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு பிள்ளையான் குழு இடையூறு விளைவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஆறுமுகன் ஜெகனின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் சென்று கொண்டிருந்த குழுவினர் மீதே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் குழுவின் அஜித் உள்ளிட்ட சிலர் ஆயுதங்களை காட்டி ஐ.தே.க உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது வேட்பாளர் ஜெகனிற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்தால் குறித்த ஐ.தே.க வேட்பாளரை கொலை செய்து விடுவதாக பிள்ளையான் குழுவின் அஜித் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தின் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளர், தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

No comments: