Monday 28 July 2008

இராணுவத்திலிருந்து தப்பி வந்து போலியான வீதிச் சோதனைச்சாவடி அமைத்த நபர் கைது

போலியான வீதிச் சோதனைச் சாவடியொன்றை அமைத்து வாகனங்களை சோதனையிட்டு பணம் பறிக்க முற்பட்ட இராணுவத்திலிருந்து தப்பிய நபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இராணுவ கடமைகளை மேற்கொண்ட நபர் ஒருவரே அண்மையில் அங்கிருந்து தப்பி இந்த போலி வீதிச் சோதனைச் சாவடியை அமைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி பேராதெனிய பகுதியில் திடீர் வீதிச் சோதனைச் சாவடியொன்றை அமைத்து குறித்த நபர் மேலும் 3 பேரது ஒத்துழைப்புடன் வாகனங்களை சோதனையிட்டுள்ளார்.

வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரது மோட்டார் சைக்கிளையும் குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் அபகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவச் சீருடை அணிந்து போலித் துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை குறித்த படைவீரர் மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments: