Friday, 4 April 2008

"இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" தமிழக உண்ணாவிரதம் மற்றும் எதிர்தாக்குதலின் அறுவடை

Narayana Gowda

பெங்களூரில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சகோதரர்களாக இருப்போம் என கெளடா அறிவித்தார். இந்த சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் வன்முறை வெடித்துள்ளது. பெங்களூரில்தான் இது உச்சத்தில் உள்ளது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தையும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இந்த போராட்டங்களை கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்புதான் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கன்னட ரக்ஷன வேதிகேவின் தலைவர் நாராயண கெளடா நேற்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை சந்தித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூர் பத்திரிக்கையாளர் சங்கத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இருவரும் பரஸ்பரம் பூக்கள், பழங்களை கொடுத்து நட்பையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் சால்வையும் அணிவித்துக் கொண்டனர்.

பின்னர் நாராயண கெளடா செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானதே தவிர கர்நாடகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் எதிரானதல்ல.

எப்போதுமே பிற மொழியினருக்கு எதிராக நாங்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை. பெல்காமில் கூட மகாராஷ்டிர அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தினோம். மராட்டிய மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதில்லை.

எனவே இனிமேல் எப்போதும் போல தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்களாக இருப்போம். தமிழர்களுக்கு எதிராக எந்தப் போராட்டம் நடத்த மாட்டோம்.

10ம் தேதி நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்து, பத்திரிக்ைகள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். அன்றைய தினம் எந்த தனி நபரின் சொத்துக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ சேதம் ஏற்படுத்த மாட்டோம் என்றார் கெளடா.

சண்முகசுந்தரம் பேசுகையில், பெங்களூரில் உள்ள தமிழர்கள் வீடுகளில் தமிழ் பேசினாலும் கூட உள்ளத்தளவில் கன்னடர்கள்தான். நாங்கள் கன்னடர்களின் உடன் பிறந்த சகோதரர்கள். எங்களால் இதுவரை கன்னடர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை.

மாநிலம் முழுவதும் உள்ள இரு தரப்பினரும் அமைதியுடன் வாழவே விரும்புகிறோம். பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நீண்ட காலமாகவே பிற மொழியினருக்கு கன்னடம் கற்றுத் தருகிறோம்.

கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். பெங்களூரில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கான நிலத்தை சின்னச்சாமி முதலியார் என்ற தமிழர்தான் தானமாக வழங்கினார்.

எனவே அன்றும் சரி, இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி கன்னடர்களுக்கு விரோதமாக கர்நாடகத் தமிழர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.

நாராயண கெளடாவின் இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறையக் கூடும் என்ற சின்ன நம்பிக்கை கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கர்நாடக பந்த்: தமிழ் சங்கம் ஆதரவு

மேலும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து கன்னட ரக்ஷன வேதிகே வரும் 10ம் தேதி அறிவித்துள்ள மாநிலம் தழுவிய கர்நாடகா பந்த்துக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பந்த்துக்கு ஆதரவு தருவதாகவும், அதேசமயத்தில் தமிழக பஸ்களை, லாரிகளை, வாகனங்களை போராட்டம் என்ற பெயரில் மறிப்பதையும், தாக்குவதையும் கைவிட வேண்டும் என்று சண்முகசுந்தரம் கூறினார்.

இதை நாராயண கெளடா ஏற்றதையடுத்து பந்துக்கு ஆதரவு தருவதாக சண்முகசுந்தரம் ஒப்புக் கொண்டார்.

நேற்றைய தமிழக உணர்வலைகளின் தாக்கம் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் கன்னடகர்களுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்ட கொதிப்பு ஆகியவை கன்னடர்களை சிந்திக்க வைத்துள்ளது. தவிரவும் கன்னடத்தில் வாழும் தமிழர்கள் எதையும் எதிர் கொள்ளும் நிலையில் தயாராகவும் இருக்கிறார்கள் எனும் நிலை, கடந்த காலத்தில் போல் ஓடாமல் எதிர்த்து போராட தமிழர்கள் தயார் நிலையில் தம்மை தயார்படுத்திக் கொண்டுள்ள தன்மைகள் கன்னடர்களை அமைதி கொள்ள வைத்திருக்கிறது.

1 comment:

Nagarajan Subramaniyam said...

its a good sign. however,i think supporting the bandth is not good which means we are also denying the okenakal project.