Thursday 29 May 2008

ஆயுதங்களை இலங்கை வாங்கிக் குவிக்க இந்தியா ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி: பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் திடுக்கிடும் தகவல்


"இராணுவத் தளபாடங்களை வாங்குவதற்காக இலங்கைக்கு இந்திய அரசு நூறு கோடி டொலர் (இலங்கைப் பணத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா) நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது.'' இவ்வாறு பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

சென்னையில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்த மாதம் 5ஆம் திகதி இலங்கை அரசுக்கு இந்தியா பத்தாயிரம் கோடி ரூபாவை நிதியுதவி அளித்திருக்கின்றது.

இந்த நிதியைப் பெற்ற மறுநாளே இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பாகிஸ்தானுக்குச் சென்று ஆயுதங்களை வாங்கியிருக்கின்றார்.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று கூறிவரும் இந்திய அரசு, போரில் ஈடுபடும் ஒரு சாராருக்கு நிதியுதவி அளித்து வருவது எந்த வகையிலும் நியாயமான செயலாகக் கருதமுடியாது.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். என்று கூறினார்.

No comments: