Friday 30 May 2008

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 25 படையினர் பலி- 45 பேர் படுகாயம்

மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரின் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத்திடல் பகுதியில் இருந்து தேனுடையான் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இன்று நண்பகல் வரை நடைபெற்ற படையினரின் பெரும் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

நண்பகல் ஓய்வின் பின்னர் மீண்டும் பிற்பகல் 12:30 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து மாலை 6:00 மணியளவில் பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கியுள்ளனர்.

இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயடைந்துள்ளனர். படையினரின் பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையில் மன்னார் பெரியமடுவுக்கு வடக்காகவும் தென்கிழக்காகவும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

No comments: