Wednesday 28 May 2008

(4ம் இணைப்பு)சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் தாக்கியழிப்பு: 13 படையினர் பலி- ராடார், 3 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் மீட்பு

யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார், 50 கலிபர் துப்பாக்கி, வெடிபொருட்கள், 3 உடலங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

( 5 ஆம் இணைப்பு: படங்கள், படையினரின் 3 உடலங்கள் மீட்பு, ஆயுதங்கள் விபரம், வரைபடம்)

யாழ். நகரில் இருந்து 1 கிலோ மீற்றர் தெற்கில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:25 மணிக்கு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் அதிரடித் தாக்குதலை தொடுத்துள்ளனர்.

இத்தாக்குதல் அதிகாலை 2:00 மணிவரை நீடித்துள்ளது.

மண்டைதீவுக்கும் யாழ். நகருக்கும் இடையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் முட்கம்பிவேலிகள் கடலில் சுற்றிவர அமைக்கப்பட்டு ராடார் அவதானிப்புக்களுடன் அதிகூடுதல் பாதுகாப்புக்களுடன் அமைந்துள்ளது.

இதற்கு மிக அருகாமையில் மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினரின் பாரிய "வேலுசுமண" தளம் அமைந்துள்ளது. இதிலும் ராடார் தளம் மற்றும் கடற்கலங்களின் தரிப்பிடமும் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தளமாக யாழ். நகரத்துக்கு தெற்காக இத்தளம் உள்ளது.

யாழ். கடலேரியின் முழுமையான பாதுகாப்பை இந்த இரு தளங்களும்தான் உறுதிப்படுத்தி வந்துள்ளன.

மேலும் யாழ். நகரின் கரையோரத்திலும் அதிகளவில் சிறிலங்கா தரைப்படை நிலைகள், மோட்டார் நிலைகள் என்பனவும் இருக்கின்றன.



இவற்றுக்கு மத்தியில் சிறுத்தீவு கடற்படைத் தளத்திற்கு கடற்புலிகளின் படைக்காவிப் படகுகளில் சென்று தரையிறங்கிய கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணிகள், தாக்குதலை நடத்தி அதற்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர்.

கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் சகிதம் சென்ற இந்த கொமாண்டோ அணியினர், அங்கிருந்த சிறிலங்கா கடற்படையினரை தாக்கி, தளத்தை 35 நிமிடநேரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது படைத்தளத்தை தாக்கி அழித்து படைப்பொருட்களை கைப்பற்றிய கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினர் வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.

இத்தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர். மேலும் பல படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட 3 கடற்படையினரின் உடலங்கள், பெருமளவிலான படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.



கைப்பற்றப்பட்ட படைக்கலங்கள் விபரம்:

ராடார் - 01

50 கலிபர் ரக துப்பாக்கி - 01

பிகே எல்எம்ஜி - 01

ஏகே எல்எம்ஜி - 01

60 மில்லி மீற்றர் எறிகணை மோட்டார் - 01

40 மில்லி மீற்றர் குண்டு செலுத்தி - 01

மற்றும் பெருமளவிலான படை வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படையினரின் "குயின்ராக்" தளம் கடற்புலிகளின் ஈருடக தாக்குதல் அணியினரால் அழிக்கப்பட்டு ராடார்கள், 50 கலிபர் ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்களை கைப்பற்றி வெற்றிகரமாக தரையிறங்கியதன் பின்னர் யாழ். நகருக்கு நெருக்கமான கடற்படைத்தளம் இன்று அழிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: விடுதலைப் புலிகள்

No comments: