Saturday 31 May 2008

புதிதாக உருவாகும் 61 வது சிங்களப்படை டிவிசன் போரில் திருப்பங்களை தருமா-வீரகேசரி சுபத்ரா

போர்அரங்குகளில் படைத் தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங் கியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பிரதேசங் களைப் பாதுகாப்பது பெரும் சிரமமான காரியமாகி வருகிறது. இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில் அவசர அவசரமாக புதிய டிவிசன் (படைப்பிரிவு) ஒன்றை உரு வாக்கும் நடவடிக்கைகளை இராணுவத் தலைமை மேற் கொண்டிருக்கிறது.

61ஆவது டிவிசன் என்ற குறியீட்டுப் பெய?ல் அமைக்கப்படவுள்ள இந்த டிவிசன் இலங்கை இராணுவத்தின் 13ஆவது டிவினாகும். பனாகொடவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் 11ஆவது டிவிசன் தென் னிலங்கையின் பாதுகாப்பைக் கவனிக்கிறது. அனுராதபுரம், மன்னார், வவுனியா மாவட் டங்களின் பின்னிலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 21 ஆவது டிவிசன் இயங் குகிறது.

திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்கே மணலாறு முதல் தெற்கே வெருகல் வரையான பகுதிகளில் 22ஆவது டிவிசன் செயற்படுகிறது.

மின்னேரியாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள 23ஆவது டிவிசன் பொலனறுவ, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் 51ஆவது டிவிசனும், வடமராட்சி தென்மராட் சிப் பகுதிகளில் 52ஆவது டிவிசனும் பாது காப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடு படுத்தப்பட்டுள்ளன. 53 ஆவது டிவிசன் கிளாலி முதல் முகமாலை வரையிலும், 55ஆவது டிவிசன் முகமாலை முதல் நாகர் கோவில் வரையிலுமாக 11கி.மீ நீளமான முன்னரங்க நிலைகளின் பாதுகாப்பில் ஈடுபடுத் தப்பட்டிருக்கின்றன.

வன்னியில் 56ஆவது டிவிசன் ஓமந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் முன்னரங்க பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அதே வேளை, 57ஆவது டிவிசன் கல்மடுவைத் தலைமையகமாகக் கொண்டு தற்போது பாலமோட்டை, விளாத்திக்குளம், பாலம்பிட்டி, மடு போன்ற பெரும் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ளது.

58ஆவது டிவிசன் மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கிழ க்கு, வடக்கு பகுதிகள் முதற்கொண்டு திருக்கேதீஸ் வரத்துக்கு வடக்கே உள்ள பகுதிகள் வரை தமது முன்னரங்க நிலைகளை விஸ்தரித்து நிலை கொண்டிருக்கிறது.

இந்த வருடத் தொடக்கத்திலிருந்து முறைப்படி இயங்கத் தொடங்கிய 59ஆவது டிவிசன், மணலாறில் கொக்குத்தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ நீளமான பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இராணுவம் புதிதாக 61ஆவது டிவிசன் என்ற புதிய படைப்பிரிவை உருவாக்கும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இது இராணுவத்தின் 13ஆவது டிவிசன் எனக் குறிப்பிடப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இயங்கக் கூடிய நிலையில் இருப்பது 12 டிவிசன்களேயாகும். 2000ம் ஆண்டில் ஆனையிறவில் இருந்த 54ஆவது டிவிசன் செயலிழந்து போய்விட்டது. அதை மீள் உருவாக்கம் செய்வதை படைத்தலைமை தவிர்த்து வருகிறது.

இராணுவத்தில் தற்போதிருக்கும் 11, 21, 22, 23, 51, 52, 56 ஆகிய டிவிசன்கள் முழுமையான தற்காப்பு படைப்பிரிவுகளாகவோ அல்லது அரைத் தாக்குதல் டிவிசன்களாகவோ தான் உள்ளன. 53, 55, 57, 58, 59 ஆகிய டிவிசன்கள் மட்டுமே தாக்குதல் டிவிசன்கள் ஆகும். இந்தநிலையில் புதிதாக உருவாக்கப்படும் 61ஆவது டிவிசன் தாக்குதல் டிவிசனாக அல்லாமல் தற்காப்பு டிவிசனாகவே இயங்கப் போகிறது.

வவுனியா, மன்னார், மற்றும் மணலாறு அடங்கிய வன்னியின் முன்னரங்க நிலைகளின் பின்புறத்தில் 21, 22, 56 ஆகிய மூன்று டிவிசன்களைச் சேர்ந்த படையினர் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவை போதாதென்று மணலாறின் சில பகுதிகளைப் பாதுகாக்க 2500 பேர்கொண்ட விசேட அதிரடிப்படையும் களம் இறக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் புதிதாகக் கைப்பற்றப்படுகின்ற பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் போதிய படையினர் இல்லாததால் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக 57ஆவது டிவிசன் வன்னியின் மேற்குக் களமுனைகளில் பெரும் பிரதேசத்தில் நிலைகொள்ள வேண்டியிருக்கிறது.

தற்காப்பில் கவனம் செலுத்திய படியே தாக்குதல் நகர்வுகளைச் செய்ய முடியாத நிலை 57ஆவது டிவிசனுக்குப் பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. 58ஆவது டிவிசனும் புதிதாகப் பல பிரதேசங்களைக் கைப்பற்றியிருக்கின்ற போதும் 57 ஆவது டிவிசன்தான் தற்காப்பு விடயத்தில் அதிக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

எனவே 57ஆவது டிவிசன் கைப்பற்றிய மடு அடங்கலான பிரதேசங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 61ஆவது டிவிசனை இராணுவத் தலைமை அவசரமாக உருவாக்கி வருகிறது. ஒரு டிவிசன் என்பது குறைந்தது மூன்று பிரிகேட்களைக் கொண்டதாக 9ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையான படையினரைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இராணுவ நியமம்.

ஆனால் இலங்கை இராணுவத்தில் அப்படியான நிலையில் எந்த டிவிசனுமே இல்லை என்பது முக்கியமான விடயம்.

கடந்த வருடத்தில் இராணுவம் உருவாக்கிய 57 மற்றும் 58ஆவது டிவிசன்கள் அரைகுறையாகவே தொடங்கப்பட்டன.

இரண்டு பிரிகேட்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த டிவிசன்கள் பின்னர் புதிய படையினர் சேர்க்கப்பட்டு பயிற்சிகள் கொடுத்த பின்னரே முழுமைபடுத்தப்பட்டன. இப்போதும் அதே உத்தியைத் தான் படைத்தலைமை கையாள்கிறது.

புதிதாக உருவாக்கப்படும் 61ஆவது டிவிசனில் 611மற்றும் 612 ஆகிய இரண்டு பிரிகேட்கள் மட்டுமே இருக்கும்.

தற்காலிகமாகவே இந்த ஏற்பாடு எனச் சொல்லப்பட்டாலும் இந்த பற்றாக்குறை நிலையை நீக்கமுடியுமா என்பதை படை ஆட்சேர்ப்புத்தான் தீர்மானிக்கும்.

இந்த டிவிசனுக்கு தேவைப்படும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த மாதம் பாகிஸ் தானுக்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா விஜயம் செய்ததாகக் கூறப்பட்டாலும், சீனாவில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் கொழும்பு வந்து சேர்ந்த தற்காப்பு ஆயுதங்களே இந்த டிவிசனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

61ஆவது டிவிசனின் கட்டளை அதிகா?யாக மேஜர் ஜெனரல் லலித் தவுலகல நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த டிவிசனுக்கு பொருத்தமான அதிகா?களை நியமனம் செய்வது, படையினருக்கான மேலதிகப் பயிற்சிகள் வழங்குவது என்று படைத் தலைமை மும்மூரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது. 61ஆவது டிவிசனின் உருவாக்கம் இராணுவத்தின் வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்று படைத் தரப்பு கூறிக் கொண்டாலும் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்ப்புக்கேற்ப செயற்படுமா என்றும் இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பது பொருத்தம்.

புதிய டிவிசன் தற்காப்பு நடவடிக்கைகளுக்கென்றே உருவாக்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டில் 56ஆவது டிவிசன் உருவாக்கப்பட்ட பிறகு இராணுவம் உருவாக்கும் புதிய தற்காப்பு டிவிசன் இதுவேயாகும். அப்போது "ஜயசிக்குறு' நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைத் தக்கவைக்க போதிய ஆளணியில்லாததால் கடற்படை, விமானப்படை, பொலிஸார் என்று வன்னியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தக் கட்டத்தில்தான் தற்காப்புக்கான ஒரு டிவி சனை உருவாக்கும் நோக்கில் 56ஆவது டிவிசன் அமைக்கப்பட்டது.

ஆனால், புதிதாகச் சேர்ந்த மற்றும் தப்பியோடி மீள இணைந்த படையினரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டிவிசன், புலிகளின் ஓயாத அலைகள்3 தொடர் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கி ஒடியதன் விளைவாக, கைப்பற்றப்பட்ட பெரும் பிரதேசத்தை குறுகிய நேரத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டது.

தற்போது உருவாக்கப்படும் 61ஆவது டிவிசனும் புதிய படையினர் மற்றும் தப்பி ஓடி மீள இணைந்த படையினரைக் கொண்டே உருவாக்கப்படுவதால் இதன் தற்காப்புத் திறன் எந்தளவுக்கு வலுவான தாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.

எப்போதுமே தாக்குதல் டிவிசன்கள் முன்னேறிச் செல்ல தற்காப்பு டிவிசன்கள் கைப்பற்றிய இடங்களைப் பாதுகாப்பதே, கடந்த வருடத்தில் இரண்டு பிரிகேட்களுடன் ஆரம்பிக்கப்பட்ட 57 மற்றும் 58ஆவது டிவிசன்கள் பின்னர் புதிய படையினர் சேர்க்கப்பட்டு பயிற்சிகள் கொடுத்த பின்னரே முழுமைப் படுத்தப்பட்டன.

இப்போதும் அதே உத்தியைத் தான் படைத்தலைமை கையாள்கிறது படையினர் மத்தியிலான சலிப்பைப் போக்கி உற்சாகமான போரிடலுக்கு வழிவகுக்கும்.

ஆனால் இதுவரையில் வன்னியில் மேற்கொண்ட படைநகர்வுகள் அனைத்திலும் 57, 58, 59 போன்ற தாக்குதல் டிவிசன்களே, தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டு பணிகளையும் கவனித்து வந்தன.

இந்த நிலையானது வன்னியில் படையின?ன் செயற் பாடுகளின் வேகத்தை குறைத்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து 57ஆவது டிவிசனை விடுவிப்பது 61ஆவது டிவிசனின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.

57ஆவது டிவிசனில் நிலவிய ஆட்பற்றாக்குறை காரணமாக அதன் நகர்வுகளுக்கு விசேட படைப்பிரிவு துணையாக இருந்து செயற்படுகிறது. அதேவேளை 58ஆவது டிவிசன் அரைகுறையாக அதிரடிப்படை1 என்ற பெய?ல் உருவாக்கப்பட்ட காலம் முதல் கொமாண்டோ பிரிகேட்டைச் சேர்ந்த 2ஆவது மற்றும் 3ஆவது பற்றாலியன்கள் மன்னார் கள முனைகளில் படைநகர்வில் ஈடுபட்டு வருகின்றன.

53 ஆவது டிவிசன் என்ற சிறப்புப் படைப்பிரிவில் தான், முன்னர் விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ பி?கேட் என்பன 532 மற்றும் 533ஆவது பி?கேட் என்ற பெயர்களில் இயங்கி வந்தன. ஆனால், லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற சில காலத்தின் பின்னர், ஏற்படுத்திய மாற்றங்களை அடுத்து விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ படைப்பிரிவு என்பனவற்றை தனது நேரடிக் கண்காணிப்பில் ஒதுக்குப் படைப்பிரிவாக வைத்துக் கொண்டார். இந்தப் படைப்பிரிவைக் கொண்டே கிழக்கில் படைநகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஒரு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தியதாக அல்லாமல் வைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோப் படைப்பி?வு என்பன தற்போது வன்னிப் போர்அரங்கை விட்டு நகர முடியாத நிலையில் உள்ளன. இந்தநிலையில் 61ஆவது டிவிசன் களம் இறக்கப்பட்டால் தற்காப்பு படைவலிமை அதிகரிக்கும்போது ஒதுக்குப் படைபிரிவுகள் அந்தச் சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்புக் கிடைக்கும்.

தற்போதைய நிலையில் "ஓயாத அலைகள்' போன்ற பாரிய வலிந்த தாக்குதலை புலிகள் தொடுத்தால் படையினரால் எந்தவொரு தாக்குதல் டிவிசனையும் உதவிக்கு அனுப்பமுடியாத நிலைதான் உள்ளது. அப்படி அனுப்பப்படும் டிவிசன் குறித்த பிரதேசத்தின் நில ஆளுகையை இழக்கின்ற ஆபத்து ஏற்படும். இதனால்தான் ஒதுக்குப் படைகளை விடுவிக்கும் முயற்சி யில் படைத்தலைமை தீவிர கவனம் செலுத்துகிறது.

அதேவேளை கடந்த இரண்டு வருடங்களுக்குள் நான்கு டிவிசன்களை புதிதாக உருவாக்கியிருப்பதாக இராணுவத் தலைமை பெருமைப்பட்டுக் கொண்டாலும் இவை எந்தளவுக்கு செயற்திறன் வாய்ந்தவை என்ப தைத் தீர்மானிக்க இன்னமும் காலம் தேவைப்படுகிறது. கடைசியாக உருவாக் கப்பட்ட 59ஆவது டிவிசனை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் புதிய படையினரும் தப்பியோடி மீள இணைந்த படையினருமே இதில் உள்ளனர்.

இதன்காரணமாக மணலாறு களமுனையில் அனுபவம் வாய்ந்த ஒரே பற்றாலியனாக இருக்கும் 11ஆவது கெமுனுவோச் மட்டுமே படை நகர்வுகளில் அதிக வேகத்தைக் காண்பிக்கிறது.

57 மற்றும் 58ஆவது டிவிசன்களில் இருந்து விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ பிரிகேட் என்பன விடுவிக்கப்பட்டால் இந்த டிவிசன்களின் தாக்குதல் பலத்தையும் குறைத்தே மதிப்பிடும் நிலை ஏற்படும். பல புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் அனுபவக் குறைவுதான் படைத்தரப்புக்கு இன்னொரு முக்கிய பிரச்சினையாக இருக்கும்.

அடுத்து புதிதாக உருவாக்கப்படும் 61ஆவது டிவி சனுக்கு கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் லலித் தவுலகல நியமிக்கப்படுவது பெரும்பாலும் உறுதியாகியிருக்கிறது. ஆனால் இவர் கடந்த காலத்தில் தலைமையேற்றிருந்த படைப்பிரிவுகள் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது.

1990ம் ஆண் டில் மேஜர் லலித் தவுலகல மாங்குளம் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தபோது தான் அந்த முகாமைப் புலிகள் தாக்கியழித்திருந்தனர்.

ஆனால் இவர் குறைந்த எண்ணிக்கையான படையின ருடன் தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் 1999 டிசம்பரில் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மையமாகக் கொண்டு செயற்பட்ட 545வது பி?கேட்டின் கட்டளை அதிகாரியாக கேணல் லலித் தவுலகல பதவியில் இருந்தபோதுதான் "ஓயாத அலைகள்3' படையணிகள் அந்தத் தளத்தைத் தாக் கியழித்து கைப்பற்றின. அதன் தொடர்ச்சியாகவே ஆனையிறவின் வீழ்ச்சி இடம்பெற்றது. இப்போது அவர் மேஜர் ஜெனரலாக பதவி வகிக்கிறார்.

57ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா போன்றோர் விடுமுறையில் சென்றிருந்த காலங்களில் மேஜர் ஜெனரல் லலித் தவுலகலவே இந்த டிவிசன்களின் பதில் கட்டளை அதிகாரி யாக கடமையாற்றியிருந்தார்.

ஆயினும் கடந்த காலத்தில் வன்னியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரு முக்கிய தளங்களை படையினர் இழந்தபோது அவற்றுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் புதிய டிவிசனுக்கு கட்டளை அதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பதும் முக்கியமான விடயமாகிறது.

No comments: