Saturday 31 May 2008

இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை'

இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை'
முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது

ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது.

இலங்கை தம்பதி

இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க தயாரானார்கள். அப்போது மீராவின் வயிற்றில் கண்ட காட்சி, டாக்டர்களை திடுக்கிட வைத்தது. குழந்தை, கர்ப்பப்பையில் இருப்பதற்கு பதிலாக, அதற்கு வெளியே உள்ள சினைப்பையில் இருந்தது. ஒரு சிலருக்கு இப்படி சினைப்பையில் கரு உருவாகி இருந்தாலும், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அந்த கருவை அழிக்க செய்து விடுவார்கள். ஏனென்றால், கர்ப்பப்பைக்கு வெளியே கரு வளர்ந்து பெரிதானால், அது தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்.

உலகிலேயே முதல்முÛ
ஆனால், மீராவுக்கோ, முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே கரு வளர்ந்து குழந்தையாக உருவெடுத்துள்ளது. அது உயிருடனும் பிறந்து டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி நடப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று கருதப்படுகிறது. இதனால் அந்த பெண் குழந்தையை `அதிசய குழந்தை' என்று டாக்டர்கள் வர்ணிக்கிறார்கள். அந்த குழந்தைக்கு `துர்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெண்ணின் சினைப்பை உற்பத்தி செய்யும் கரு முட்டையுடன், ஆணின் உயிரணு இணைந்து கரு உண்டாகும். இந்த கரு, கருக்குழாய் வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடைந்து குழந்தையாக வளரும். இதுதான் இயல்பான நடைமுறை. ஆனால், மீராவுக்கோ கரு, கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாமல், சினைப்பையிலேயே தங்கி குழந்தையாக வளர்ந்து விட்டது.

டாக்டர் பேட்டி

மீராவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஆன்ட்ரூ மில்லர் கூறியதாவது:-

சினைப்பையின் வலப்புறத்தில் குழந்தையை பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. சினைப்பையின் தோல் மெல்லியதாக இருந்ததால், உள்ளே இருந்த குழந்தையின் தலை முடியையும், முக தோற்றத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. குழந்தை வளரும்போது சினைப்பை கிழியும் அபாயம் உள்ளது. எந்த நேரமும் சினைப்பை கிழிந்து, அதனால் தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் மீராவுக்கு அப்படி நடக்கவில்லை. அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.

மருத்துவ அதிசயம்

இன்னும் சொல்லப்போனால், அவருக்கு கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை வளர்வதை ஆரம்பத்திலேயே கண்டிருந்தால், அதை கலைக்க சொல்லி இருப்போம். ஆனால் அப்படி நடக்காமல், அவர் நன்றாக குழந்தையை பெற்றுள்ளார். இது மருத்துவ உலகிலேயே ஒரு அதிசய சம்பவம். இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: