Saturday 31 May 2008

சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்" வார ஏட்டுக்காக ப.தெய்வீகன் எழுதிய - படைத்துறையின் பாடப்புத்தகம் பால்ராஜ்: இழப்பினை முன்வைத்து சில பதிவுகள்

படைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது சிங்கள தேசம்.

ஆனால் பால்ராஜின் இழப்பை தமக்கு ஏற்பட்ட பேரிழப்பாக பார்க்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அது எமது போராட்டத்துக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகவும் நோக்கி நொந்து கொள்கிறார்கள் என்று அண்மையில் பால்ராஜ் நினைவு நிகழ்வில் சந்தித்த நண்பர் ஒருவரின் கேள்வி மூலமாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

எனது நண்பர் கொண்டுள்ள இந்த கவலையின் நியாயப்பாட்டை விரிவாக நோக்கும் முன் பால்ராஜை பற்றிய ஒரு பார்வை.

ஈழமண் மீது போர் தொடுக்கும் எதிரி எவனுக்கும் வயிற்றில் புளிகரைக்கும் சொல் ~பால்ராஜ்|. பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு பல முனைகளில் முன்னேற முயலும் இராணுவத்திருக்குää பால்ராஜின் படைகள் எங்கு நிற்கின்றன என்று அறிந்து கொள்வதுதான் முதல் வேலையாவும் பின்னர் பால்ராஜன் படைகளை தவிர்த்து வேறு முனைகளை உடைத்துக்கொண்டே சண்டையிடுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது என்று பால்ராஜின் பாசறையில் பயின்ற போராளி ஒருவன் பெருமையுடன் கூறினான்.

பால்ராஜ் என்பவன் சிங்களப் படைத்தளபதிகள் போல கொழும்பில் இருந்து கொண்டே கப்டன் மேஜர் லெப்ரினன்ட் கேணல் என்ற பதவிநிலைகளை கடந்து வந்தவன் அல்லன். ஒவ்வொரு களத்திலும் எதிரியை புரட்டி எடுத்து அவனது திட்டங்களை துவம்சம் செய்து எத்தனையோ விழுப்புண்களை அடைந்துதான் இத்தனை பெரிய தளபதியாக வளர்ச்சி பெற்றான். போர்க்களத்தையே தனது வதிவிடமாகக் கொண்டவன் அவன்.

'ஜெயசிக்குறு" படை நடவடிக்கைக்கு முன்னர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவம் பெரும் எடுப்பிலான நகர்வு முயற்சியொன்றை முன்னெடுத்திருந்தது. இதனை இருமுனைகளால் எதிர்கொண்ட புலிகள் கண்டி வீதிக்கு கிழக்காக ஒரு அணியையும் மேற்காக மற்றைய அணியையும் நிறுத்தி எதிர்ச்சமரில் ஈடுபட்டனர். இந்த இரு அணிகளில் பால்ராஜ் தலைமையிலான அணி எங்கு நிற்கின்றது என்பதை வானலைகளை ஒற்றுக்கேட்டு அறிந்துகொண்ட இராணுவம் அந்தப்பிரதேசத்தை விட்டுவிட்டு மற்றைய முனையாலேயே தாக்குதலை மேற்கொண்டது.

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவரது தலைமையின் கீழ் சண்டையிட்ட போராளி ஒருவர் பால்ராஜ் அண்ணா களத்தில் நின்றால் அங்கு தமது பருப்பு வேகாது என்ற பயம் இராணுவத்தினருக்கு மட்டுமல்ல அவர்களை வழிநடத்தி கூட்டி வரும் தளபதிகளுக்கும் தெரியும் என்றார்.

'எந்த ஒரு கட்டத்திலும் பதற்றப்படாமல் திட்டங்களை செயற்படுத்தும் திறமை என்பது பால்ராஜ் அண்ணா தலைவரிடமிருந்து படித்த மிகப்பெரிய பாடம். எதிரி எம் படைகளை முற்றாக தனது முற்றுகைக்குள் கொண்டுவந்து விட்டாலும் கூட பதற்றப்படாமல் அணிகளை ஒருங்கிணைந்துää தனது திட்டத்தை செவ்வனே முன்னெடுத்து சாதுரியமாக எதிரியின் கண்ணில் மண்தூவும் வித்தை பால்ராஜ் அண்ணா சண்டைகளிலும் காண்பிக்கும் சாகச விளையாட்டு.

'தாம் போட்ட திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போனவுடன்ää மாற்றுத்திட்டத்தை உடனடியாக வகுக்க முடியாமல் எமது வலையில் வீழ்ந்த எத்தனையோ சிங்கள தளபதிகளிலிருந்து பால்ராஜ் அண்ணா விலகி நிற்பது இந்த இடத்தில்தான். களநிலைமைகளுக்கு ஏற்ப திட்டங்களை முன்னெடுப்பதும் தலைவரின் நெறிப்படுத்தலை நேர்த்தியாக செயற்படுத்துவதும் அவர்பால் வியக்க வைக்கும் ஆற்றல்கள். அவரது போரியல் அனுபவமும் ஒவ்வொரு போராளியினதும் திறமையை குறிப்பாக அறிந்து வைத்திருக்கும் பக்குவப்பட்ட படைத்துறை அறிவும்தான் எமது வெற்றிகள் பலவற்றுக்கும் பலமான அடித்தளமாக அமைந்தன.

'களமுனையில் கடமையிலிருக்கும் போராளிகளை தினமும் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து நிலவரங்களை மதிப்பீடு செய்வதென்பது பால்ராஜ் அண்ணனின் அன்றாட கடமைகளில் ஒன்று.

'ஒவ்வொரு போராளியினதும் திறமைகளை அறிந்து அவற்றை தலைவரிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குரிய பணிகளை ஓதுக்குவதில் பால்ராஜ் அண்ணனின் பங்கு மகத்தானது" - என்று பால்ராஜின் பெருமை பற்றி அடுக்கிச்சென்றார் இன்னொரு போராளி.

இத்தகைய ஒரு தானைத்தளபதியை இன்று தமிழினம் இழந்திருக்கிறது. உண்மை. ஆனால் தமிழர்களின் போராட்டத்துக்கு இது ஒரு இழப்பா என்ற எனது நண்பரின் கேள்விக்கு வருவோம்.

அவரது கேள்விக்கு விடையä அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வில் பேசிய அவுஸ்திரேலிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் நித்தியகீர்த்தியின் பேச்சுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

'தனிமனித இழப்புக்கள் எமது தமிழீழப் பயணத்துக்கு ஒருபோதும் தடையாக அமையாது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் எமது போராட்டம் தொடரும். பிரிகேடியர் பால்ராஜின் இந்த எண்ணத்துக்கு செல்வடிவம் கொடுப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி" - என்று நித்தியகீர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையை இழப்புக்களால் துவண்டு போயுள்ள எம்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் போராட்டம் எத்தனையோ பல சாதனை வீரர்களை இழந்திருக்கிறது. எதிரியின் சதிவலையில் சிக்கி பல தளபதிகள் வீரச்சாவை தழுவியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தமிழினம் துவண்டு போயிருந்தால் இன்று சர்வதேசமே அங்கீகரிக்குமளவுக்கு எமது போராட்டம் இவ்வளவு தூரம் பரிணமித்திருக்காது.

இழப்புக்களால் மனம் உடைந்துபோயுள்ள இந்த மக்களின் மனநிலை அன்று தனது உற்ற நண்பன் சீலன் வீரச்சாவடைந்த போது தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்டிருந்தால் எமது விடுதலைப் போராட்டம் இவ்வளவு தடைகளை கடந்திருக்குமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த இழப்புக்களின் பின்னர் விடுதலைப் புலிகள் படைத்த வீர வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அன்று எதிரியால் ஊடுருவித்தாக்கி படுகொலை செய்யப்பட்டதால் புலிகளின் வான்படை படுத்து விடவில்லை. அனுராதபுரத்திலும் சிங்களத்தின் தலைநகரிலும் வான் வழியால் வந்து குண்டுவீசுமளவுக்கு இன்று புதுவீச்சையடைந்துள்ளது.

யாழ். மக்களின் செல்லப்பிள்ளையான மன்னார் யாழ். மாவட்டங்களின் முன்னாள் தளபதி ராதாவின் இழப்பு உயிரைப்பிசையும் உணர்ச்சி மிக்கதுதான். ஆனால் அவரது பெயரிலான விமான எதிர்ப்புப் படையணிதான் இன்று சிங்களப் படைகளின் உயிர்குடிக்கும் வல்லூறுகளை சுட்டுவீழ்த்தி கூறுபோடுகின்றன.

வன்னிக் காட்டுப்பகுதியால் தலைவரின் செய்தியுடன் வந்துகொண்டிருந்த மூத்த உறுப்பினர் ஜொனியை சதிசெய்து கொன்றார்கள். தலைவருடன் பேசி ஒரு தீர்வைப்பெறலாம் என இந்தியாவிலிருந்து கிட்டு கொடுத்த உறுதிமொழியை கேட்டுவிட்டு இங்கு வன்னி காட்டுக்குள் சதிவலையை பின்னி சாதனை படைத்ததாக எண்ணினார்கள். எதிரி இன்றுவரை அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறான். ஜொனியின் பெயரில் வடிவமைக்கப்பட்ட மிதிவெடியால் அன்று மணலாறு காட்டுப்பகுதிக்குள் இந்திய இராணுவத்தை காலடி எடுத்து வைக்கவில்லை. இன்று அதன் பிந்தைய வடிவங்கள் முகமாலையில் இராணுவத்தின் கால்களை எண்ண வைத்திருக்கின்றன.

இம்ரான் - பாண்டியன் படையணிää மாலதி படையணி சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி குட்டிசிறி மோட்டார் பீரங்கிப் படையணி விக்டர் கவச எதிர்ப்பு அணி கிட்டு பீரங்கிப் படையணி என்று தரையிலும் கடலிலும் எண்ணிக்கொண்டே போகலாம்.

சாவை தழுவிக்கொண்ட சாதனையாளர்களின் கனவுகளை சுமந்து சக போராளிகள் தமது வீரத்தால் நனவாக்கிக்கொள்வதுதான் தமிழினத்தின் வரலாறு. அவ்வாறான ஒரு இழப்புத்தான் இன்று பிரிகேடியர் பால்ராஜினுடையதும் என்பதை தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும்.

எண்பதுகளில் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய சாதனைத் தளபதி கேணல் கிட்டு. அப்போது பால்ராஜ் அவர்கள் புலிகள் அமைப்பில் இளநிலை போராளியாக இருந்தார். ஆனால் 90 இல் மாங்குளம் முகாம் தாக்கியழிப்பு 96 இல் முல்லைத்தீவு முகாம் தாக்கியழிப்பு ஆகியவற்றின் பின்னர்தான் பால்ராஜ் என்றால் யார் என்றும் 2000 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடாரப்பு தரையிறக்கத்தின் பின்னர்தான் பால்ராஜ் என்னவெல்லாம் செய்வார் என்று எமக்கு மட்டுமல்ல எதிரிக்கும் தெரியவந்தது.

அதுபோலவே தலைவனின் பாசறையில் இன்று எத்தனையோ பால்ராஜ்கள் எதிரியைப் புரட்டி எடுப்பதற்கு காத்திருக்கின்றனர். அவர்களின் வீரம் செறிவடையப்போகும் களம் எதுவென்று எதிரியே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

தமிழினம் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இருபதினாயிரம் மாவீரர்களின் தியாகத் தீயின் முன் சத்திய வேள்வியாக கொழுந்து விட்டெரியும் எமது போராட்டம் தனிமனித இழப்புக்களால் நின்று விடப்போவதில்லை. தலைவர் பிரபாகரனின் பெருவெற்றியே அதுதான்.

எத்தனையோ படையணிகள் எத்தனையோ தளபதிகள் என தமிழீழ இராணுவம் இன்று இந்தப் போராட்டத்தை எத்தனை சந்ததிக்கும் தாங்கிச் செல்லக்கூடிய வகையில் தலைவரால் கட்டமைக்கப்பட்டு விட்டது.

இந்த சுதந்திர தாகம் கொண்ட தேசத்தின் பயணத்தில் எந்த தடை வரினும் அதனை எதிர்கொள்ளக்கூடிய - வளம்மிக்க - எழுச்சி உணர்வு மிக்க - சமுதாயமாக எமது மக்களும் சிலிர்த்தெழ வேண்டும். அந்த எழுச்சியும் அதன் தொடர்ச்சியுமே எமது விடுதலையின் ஆன்ம பலமும் ஆகும்.

நன்றி: நிலவரம் (30.05.08)

No comments: