Sunday, 13 July 2008

அரசும் புலிகளும் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினால் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவத்தயார்--தென்னாபிரிக்க அமைச்சர்

*தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சி

இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டி நல்லிணக்க புரிந்துணர்வோடு செயற்பட முன் வந்தால்

இந்திய அரசின் ஒத்துழைப்போடு சாதகமான பேச்சுக்களை தொடங்குவதற்கு தனது பங்களிப்பையும் செலுத்த தயாராக இருப்பதாக தென்னாபிரிக்க தொலைத்தொடர்புகள் அமைச்சரும், சர்வதேச சமாதான செயற்பாட்டாளருமான ராதாகிருஷ்ணாபடையாட்சி (ரோய்) தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்த சமுதாய அபிவிருத்தி சமூக அநீதிஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான பெ. சந்திரசேகரனை கௌரவிக்கும் முகமாக அமைச்சர் ராதாகிருஷ்ண படையாட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே படையாட்சி இந்த உறுதிமொழியை அளித்தார்.

தென்னாபிரிக்க அமைச்சர் கருத்துதெரிவிக்கையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒரு அரசியல் பிரச்சினையாக கருதுவதை விட மனிதாபிமான விடயமாக நோக்கவேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரினதும் தார்மீக கடமையாகும்.


சகலதரப்பினரதும் சாதகமான நிலைப்பாடு ஏற்படும் இடத்தில் தென்னாபிரிக்க அரசின் அக்கறையை இவ் விவகாரத்தில் ஈடுபடுத்துவதற்கு நான் தயார். இம் முயற்சி நோர்வேயின் சமாதான முயற்சியின் அடுத்த கட்ட தொடர்ச்சியாகவே அது அமைய வேண்டும்.


இன்று உலகம் முழுவதும் லட்சணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக புலம் பெயர்ந்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்காக அரசியல் தஞ்சம் வழங்க எந்த நாடும் பின் தங்கியதுமில்லை.

இன்றும் கூட இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக நாள்தோறும் நூற்றுக்கணக்காணவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அமைச்சர் சந்திரசேகரன் தமது உரையில்

இந்தியா ஆரம்பத்தில் காட்டிய அதிக முக்கியத்துவத்தினால் தான் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்தது.

அதற்குப் பின் நடந்த துயரமான சம்பவங்களினால் இந்திய மக்களும், அரசும் வெறுப்புணர்வுடன் ஒதுங்கி நிற்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இந்தியா எந்த காலத்திலும் எந்த நாட்டையும், எந்த இனத்தையும் ஆக்கிரமிக்கவோ அடிமைப்படுத்தவோ முயற்சித்ததாக வரலாற்றில் பதியப்படவில்லை.

பாகிஸ்தான், பங்களாதேஷ் விவகாரத்தில் கூட இந்தியா தனது ஆக்கிரமிப்பு விஸ்தரிப்பு வாதத்தை தொடங்கியிருக்கிறதோ என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

ஆனால் இந்தியா பங்களாதேஷ் சுகந்திர நாடக்கி அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டு வீரத்தோடு வெளியேறியது என்று தெரிவித்தர்.

தொடர்ந்து அமைச்சர் சந்திரசேகரன் கருத்துதெரிவிக்கையில். இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா அக்கறை காட்டினால் அது எவருக்கும் பக்கச்சார்பாக நடத்துகொள்ளாது என்பதை கடந்தகால வரலாறுகள் காட்டி நிற்கின்றன.

இன்று இனப்பிரச்சனைத் தீர்வில் எந்த நாடும் அக்கறை காட்டாமல் ஒதுங்கிநின்று பார்வையாளர்களாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இந்தியாவும் இதே நிலைப்பாட்டில் இருக்காமல் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி இனப்பிரச்சினையை ஒரு முடிவிற்கு கொண்டு வருவதன் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதோ மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும்.


இந்த சமாதான முயற்சிக்கான சகல முயற்சிகளையும் மலையக மக்கள் முன்னணி மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறது என்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்,இந்திய அரசுக்கும், தென்னாபிரிக்க அரசுக்கும் தெரிவித்திருக்கின்றோம்.


சகல தரப்பினரதும் சம்மதம் தெரிவிக்கப்படும் போது இலங்கை அரசோடு இது தொடர்பாக பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும், மேலும் இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாக இது ஒரு அரசியல் விடயம் என்பதை விட ஒரு மனிதாபிமான விடயமாகவே கருதி நான் செய்வதற்கு தீர்மானித்துள்ளேன் என்று அமைச்சர் பெ. சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

No comments: