Saturday, 5 April 2008

ரவிராஜ் எம்.பி. கொலை குறித்து விசாரணை நடத்திய ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாரின் அறிக்கை எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. ரவிராஜின் மரணம் தொடர்பான ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாரின் விசாரணை அறிக்கையை உடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு ஐ.தே.கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல கூறியவை வருமாறு:
இந்நாட்டில் எம்.பிக்கள் பலர் ஜனநாயக விரோத சக்திகளால் சுட்டுக்கொல்லப் பட்டுவிட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்தான் அதிக எண்ணிக்கையான எம்.பிக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் தமிழ் எம்.பிக்கள்தான் அதிகம்.
இந்த எம்.பிக்களின் கொலைகள் தொடர்பாக எந்தவொரு விசாரணையும் சரியான முறையில் நடத்தப்படவில்லை.
மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்காக பெரும் எடுப்பில் விசாரணைகள் தொடங்கப்படுகின்றவை போல காட்டப்படுகின்றன.
ஆனால், அந்த விசாரணைகளால் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போகின்றது. சில நாட்கள் கடந்ததும் விசாரணை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. விசாரணை அறிக்கைகள் காணாமல் போய்விடுகின்றன.
இதேபோல்தான் ரவிராஜின் கொலை தொடர்பாகவும் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு கூறியது. ஆனால், அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அந்த அறிக்கையை உடன் சமர்ப்பிக்குமாறு நாம் இப்போது அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். என்றார்.


No comments: