Thursday, 24 April 2008

சமுதாயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புகழாரம்

சென்னை: ""எழுத்து உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தமிழ் சமுதாயத்தில் அதிர்வுகளை உண்டாக்கியவர் ஜெயகாந்தன்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புகழ்ந்தார்.மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் பிரம்ம கான சபா சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப் படம் திரையிடும் விழாவும், இசைஞானி இளையராஜா இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் பரிசளிப்பு விழாவும் நேற்று நடந்தது.ஆவணப் படத்தை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:


ஒரு மணி நேரமாக இங்கு குற்றால அருவியில் குளிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளர் ஜெயகாந்தன் இதுவரை 75 முறை பூமியை வலம் வந்துள்ளார். அவரது பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் எழுத்துலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தமிழ் சமுதாயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர். நட்பிற்கு இலக்கணமாக இளையராஜா, இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார். அதில் ஜெயகாந்தனின் பல்வேறு நிலை சிரிப்புகளை நான் ரசித்துப் பார்த்தேன். அது அவரது வாழ்வின் அர்த்தத்தை பிரதிபலிக்கின்றன.


கடந்த 1968ல் எனது பள்ளித் தோழன் ராமநாதசாஸ்திரிகளுடன், தீபாவளி மலரில் நான் படித்த கதை ஜெயகாந்தன் எழுதிய "அக்ரஹாரத்து பூனை'. இதைப் படித்த பின்னர் எனது நண்பர்களுடன் விவாதித்து, உயிர் வதை கூடாது என்ற முடிவுக்கு வந்தோம்."ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்' என்பார் ஜெயகாந்தன். அவர் எழுபத்தைந்து வயதைக் கடந்த எழுத்துச் சின்னம். எவன் ஒருவன் தன்னலம் மறுத்து, பொதுவான மனித குலத்திற்கு தன் வாழ்வை அர்ப்பணிக்கிறானோ அவனே மனிதன்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

1 comment:

ttpian said...

every man is metal;time only moulds him into better shape;while moulding,if u r not flexible,u are broken!
still I remember it,Mr.Jeyakanthan!