Sunday, 20 July 2008

வலிந்த தாக்குதலை புலிகள் ஆரம்பிக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்: முகமாலை இராணுவ அணி கட்டளை அதிகாரி


சிறிலங்காப் படையினரின் முகமாலை காப்பரண்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தவேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாகவும் அவ்வாறு தாக்குதல் நடத்தும் புலிகளை கொன்று ஒழிப்பதற்கே தாம் காத்திருப்பதாகவும் சிறிலங்காப் படையின் 55 ஆவது டிவிசன் படைணியின் உப பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்ற சிங்கள ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வைத்து வழங்கிய பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

"முகமாலை முன்னரங்கு நிலைகளில் விடுதலைப் புலிகள் கடும் பயிற்சி பெற்ற தமது போராளிகளை நிறுத்தியுள்ளனர்.


அவர்களைப்போன்று, நாமும் எமது உயர்பயிற்சி பெற்ற படையினரை அங்கு குவித்திருக்கின்றோம்.

"குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் புலிகள் முகமாலை முன்னரண்கள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களை எவ்வாறு கொன்றொழிப்பது என்ற உபாயம் எமக்கு தெரியும்.


அவர்கள் அவ்வாறு தாக்குதல் நடத்தவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவ்வாறு, தாக்கினால் அந்தச்சமரில் நாம் வெல்வோம்.

"கடந்த தடவை முகாமலையில் இடம்பெற்ற சண்டை எமக்கு தோல்வியே அல்ல. நாம் எமது இலக்கை அடைந்தோம் என்றுதான் கூறவேண்டும்.

"நீங்களே பார்க்கலாம். எட்டு கிலோமீற்றர் அகலம் கொண்ட - ஒடுங்கிய - துருப்புக்களை நகர்த்தக்கூடிய வசதியற்ற - கிளாலி - நாகர்கோவில் பிரதேசத்திலேயே இந்த சண்டை நடைபெற்றது. அப்படியான ஒரு பகுதியில் சண்டை நடைபெறும்போது இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.


"ஆனால், இந்த சமரில் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் எண்ணுக்கணக்கற்றவை. எமது தரப்பில், மூன்றாம் வகை(P3) காயங்களுக்கு உள்ளான படையினர்தான் அதிகம். அவர்கள் மருத்துவமனையில் குணமடைந்து மீண்டும் கடமைக்கு திரும்பிவிட்டார்கள்.

"இந்த சமரில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டமைதான் கவலைக்குரிய விடயம். ஆனால், அந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

எமது படைகளின் வெற்றிக்கு காரணம் திறமையான தலைமைதான்.அந்த சிறந்த தலைமைத்துவத்தால் எமது படையினர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments: