Saturday, 5 April 2008

ரஜினியை பின்பற்ற அமிதாப்புக்கு சிவசேனா அறிவுறுத்தல்(வீடியோ இணைப்பு)

பிழைக்க வந்த மாநிலத்திற்கு விசுவாசமாக இருக்கும் விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்தை பின்பற்றுமாறு அமிதாப் பச்சனுக்கு சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் , தான் நடித்து பெயர், புகழ், பணம் போன்றவற்றை ஈட்டக் காரணமாக இருந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தை விட தான் பிறந்த உத்தரபிரதேச மாநிலத்திற்குதான் அதிக விசுவாசமாக இருப்பதாக நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை அண்மையில்தான் ஓய்ந்தது.

இந்நிலையில், இதே மாநில விசுவாச பிரச்சனையை தற்போது சிவசேனா கையிலெடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான ' சாம்னா ' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், " அமிதாப் தான் பிறந்த உத்தரபிரதேச மாநிலத்தைவிட , வேலை செய்துகொண்டிருக்கும் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்குதான் அதிக விசுவாசமாக இருக்க வேண்டும் " எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது விஷயத்தில் கர்நாடகாவில் பிறந்த ரஜினிகாந்த் , ஒகேனக்கல் பிரச்சனைக்காக கர்நாடகாவை கண்டித்து தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டி, அமிதாப்பும் ரஜினிகாந்தை பின்பற்ற வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டுரை குறித்து அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது , " மகாராஷ்ட்ராவுக்காக நான் ஏதாவது செய்திருக்கிறேனா இல்லையா என்பதை நீங்களே ( செய்தியாளர்களே ) கூறுங்கள் " என பதிலளித்தார்.

மேலும் தம்மை குறிவைத்து தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அமிதாப் கூறினார்.

No comments: