Tuesday, 8 April 2008

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: நெடுமாறன் பதிலடி


தமிழர் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை எதிர்த்துப் போராட தயங்க மாட்டேன் என முதல்வர் கருணாநிதிக்கு, பழ.நெடுமாறன் பதிலளித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நான் விடுத்த அறிக்கையைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி ஆத்திரமடைந்து நிதானம் இழந்திருக்கிறார் என்பதை அவரது பதிலறிக்கை எடுத்துக் காட்டுகிறது. முதலமைச்சர் தகுதிக்குரிய கண்ணியத்தை காக்க தவறியதோடு தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவர் நிலைக்கு நானும் கீழிறங்கிப் பதிலடி கொடுக்க விரும்பவில்லை. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி ஒரு போதும் பருந்தாக முடியாது என்பதை முதலமைச்சர் நிரூபித்திருக்கிறார். தடா, பொடா போன்ற கொடிய சட்டங்கள் என் மீது ஏவப்பட்ட காலத்திலேயே அவற்றுக்கு அஞ்சாமல் எதிர் கொண்டவன் நான்.

தமிழர் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை எதிர்த்துப் போராட ஒருபோதும் தயங்கமாட்டேன். யாருடைய மிரட்டலுக்கும் பயந்து பின் வாங்க மாட்டேன் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என நெடுமாறன் கூறியுள்ளார்.

No comments: