Saturday, 5 April 2008

' கர்நாடகாவில் ரஜினி படத்திற்கு தடை '

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ,அவரை கர்நாடகாவில் நுழைய விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

கன்னட சலுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்தான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் எப்போதும் வரிந்துக் கட்டிக் கொண்டு முதலில் நிற்பவர்.இந்த அமைப்பை போன்றே கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் அணி சேர்ந்துள்ளன.

தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள ஒகேனக்கல் பிரச்சனைக்காக கர்நாடகா எல்லை பாதுக்கப்பு கமிட்டி என்ற ஒரு அமைப்பை வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள்தான் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

தமிழ் திரைப்படங்களை திரையிடக் கூடாது , தமிழ் டிவி சேனல்களை ஒளிபரப்பக் கூடாது மற்றும் தமிழ் நாளிதழ்களை விநியோகிக்கக் கூடாது என அவர்கள் மிரட்டினர்.தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் , கர்நாடகாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்ததோடு, இப்பிரச்சனையில் தமிழகத்தின் நிலைக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் , ரஜினியின் இந்த பேச்சால் ஆத்திரமடைந்துள்ள வாட்டாள் நாகராஜ்,கர்நாடகா எல்லை பாதுக்கப்பு கமிட்டி கூட்டத்தை இன்று கூட்டினார்.இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ் , ரஜினியை கர்நாடகாவில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும் , அவரது திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தார்.

மேலும் ரஜினியின் படங்களை புறக்கணிக்குமாறும் அவர் கர்நாடக மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இதற்கான முடிவு மேற்கூறிய கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் , அவர் ஒரு மராட்டியர் என்றும் கூறினார்.

No comments: