Monday, 26 May 2008

மலேசியாவின் முதல் 40 பணக்காரர்களில் இலங்கைத் தமிழருக்கு 2ஆம் இடம்

மலேசியாவில் முதல் 40 இடங்களிலுள்ள பணக்காரர்களைத் தரவரிசைப்படுத்தியிருக்கும் 'போபர்ஸ்' சஞ்சிகை, மலேசியாவிலுள்ள இலங்கைத் தமிழருக்கு இரண்டாம் இடத்தை வழங்கியுள்ளது.

மலேசியாவில் 'மெக்சிஸ் டெலிகொம்' நிறுவனத்தை நடாத்திவரும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 70 வயதான ரீ.ஆனந்த கிருஷ்ணனே இவ்வாறு இரண்டாம் இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். இவரது தேறிய சொத்து 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அச்சஞ்சிகை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில், சிறீலங்கா டெலிகொம் பங்குகளைக் கொள்வனவு செய்திருக்கும் 'மெக்சிஸ் டெலிகொம்' நிறுவனம், இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் 500-600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மெக்சிஸ் நிறுவனம், 2007 இல் இந்தியாவின் தொலைத் தொடர்பு இயக்குனரான எயார்செல் நிறுவனத்திடமிருந்து 74 வீத பங்குகளைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் போபர்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இப்பட்டியலில், 84 வயதான ரொபேர்ட் கூக் 10 பில்லியன் தேறிய சொத்துடன் முதலிடத்திலுள்ளார்.

அதேவேளை, இந்தியத் தமிழரான சிவ் நாதர் இந்தப் பட்டியலில் 10ஆம் இடத்திலுள்ளார்.

அத்துடன், இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட விநோத் சேகர் 320 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய சொத்துமதிப்புடன் 16வது இடத்திலுள்ளார்.

மற்றுமொரு இலங்கைத் தமிழரான 63 வயதுடைய ஜீ.ஞானலிங்கம் 230 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய சொத்துகளுடன் 26ஆவது இடத்திலுள்ளார்.

No comments: