Saturday, 5 July 2008

சூடானிலும் கிழக்கு திமோரிலும் நடைபெறும் பொலிஸ் பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பயங்கரவாத தடுப்புபொலிஸ் அதிகாரிக்கு தடை

அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் பிரதிவாதியான பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டரை வெளிநாடு செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

விமான நிலைய அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் தன்னைக் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டது தொடர்பாக மிருதுசிறி அபயசிங்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை உள்ள நிலையில் பிரதிவாதி வெளிநாட்டில் பொலிஸ் பயிற்சியில் கலந்துகொள்ளச் செல்வதற்கு உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.


இந்த விண்ணப்பம் புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் சிராணி திலகவர்த்தன, சலீம் மர்சூக் மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இவருக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ள நிலையில் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று நீதியரசர்கள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

ஐ.நா. ஏற்பாட்டில் சூடானிலும் கிழக்கு திமோரிலும் நடைபெறும் பொலிஸ் பயிற்சியில் கலந்துகொள்வதற்கு இவர் தெரிவுசெய்யப்பட்டார்

No comments: