Thursday 8 May 2008

புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்

* கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க

வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து புததளம் மற்றும் மதவாச்சி பகுதியில் தங்கியிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை திருகோணமலை மாவட்டத்திற்கு அனுப்புவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதன் மூலம் தேர்தல் மோசடிகளுக்கு வாய்ப்பிருக்கலாமென ஐ.தே.க.வின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மற்றும் மதவாச்சி பகுதியில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் நேற்று புதன்கிழமை காலை இ.போ.ச. பஸ்கள் மூலம் புல்மோட்டை, மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

முஸ்லிம் அமைச்சர் ஒருவரே இவர்களை திருகோணமலைக்கு கொண்டு வருவதில் தீவிர அக்கறை காட்டுவதாகவும் தேர்தல் தினத்தன்று இவர்கள் விடயத்தில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஐ.தே.க. எச்சரித்துள்ளது. வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெறுவதை பொது மக்களே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் ஐ.தே.க.கேட்டுள்ளது.

No comments: