Thursday 8 May 2008

ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?

*ரவிகருணாநாயக்க எம்.பி.

தாங்கள் ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே பகிரங்கமாகக் கூறும் போது அரசு மட்டும் பிள்ளையானிடம் ஆயுதங்கள் இல்லையென கூறி வருகிறது. கிழக்கிலிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் அரசாங்கம், ஏன் தற்போது பூனைகளுக்கு பயப்படுகிறதென ஐ.தே.க. எம்.பி.ரவிகருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.

பாரளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசரகால சட்ட நீடிப்புவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் கூறியதாவது;

அரசாங்கம் இந்த நாட்டை இருண்ட யுத்தத்திற்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர்களெல்லாம் மக்களுக்காக எதையும் செய்யத்தயாராயில்லை. கூலிக்குமாரடிக்கும் வேலையையே அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.யானைக்கும் புலிகளுக்கும் கூட்டென்ற பழையை பல்லவியை மீண்டும் தொடங்கியுள்ளனர். நாம் புலிகளுடன் கூட்டு வைத்திருந்தால் ஜனநாயக தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருப்போம். அரசு தான் தற்போது புலிகளாக விருந்த பூனைகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்துடன் அரசு விளையாடுகின்றது. சர்வதேசத்தினர் `பிளக்'கை கழற்ற வேண்டுமெனக் கூறியவர்கள், இன்று மின்சாரம் தாக்கி சிதறிப் போய்க்கிடக்கின்றனர். ரிமோட் ஒருவரின் கையிலும் பற்றரி இன்னொருவரின் கையிலும் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டுதான் இந்த நாட்டை அரசு காப்பாற்றப் போகின்றதா? இந்த வருடம் மட்டும் 176 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நாடு தாங்குமா?

இராணுவ இழப்புகள் தொடர்பாக அரசு உண்மைகளை மூடிமறைக்கிறது. ஆனால் புலிகளின் இழப்புகளை மட்டும் எவரும் நம்பமுடியாதளவில் கூறுகின்றனர். புலிகளை அழிப்பதற்கு பலர் கால எல்லைகளை நிர்ணயித்தார்கள். பின்னர் அதனை நீடித்தார்கள். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.

சில மக்களை சில வேளைகளில் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா வேளையும் ஏமாற்ற முடியாதென்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments: