Saturday, 24 May 2008

தமிழ் மக்களை துரத்திவிட்டு வாகரைப் பகுதியில் சிங்களக் குடியேற்றம்

மட்டு.மாவட்டத்தில் கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாகரைப் பகுதியில் இராணுவத்தின் சிவில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

வாகரை ஊரியான் காட்டுப் பகுதியில்; அரசுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதேச செயலகக் கட்டிடம், பயிற்சிக் பட்டறைக் கட்டிடம் பலநோக்குக் கூட்டறவுச் சங்க கட்டிடம் போன்ற பல்வேறு அரச கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் புத்தளம், சிலாபம் பகுதியில் இருந்து கலகுடா மற்றும் வாகரைப் பகுதிக்கு வர்ண மீன், கடல் அட்டை பிடிப்பதற்காக வரும் சிங்கள மீனவர்களை இந்த நிலப்பரப்பில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது.

கதிரவெளிக்கும் புச்சாங்கேணிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி வர்ண மீன்கள் மற்றும் அட்டைகள் செறிவாக உள்ள இடங்களாகும. இப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக பிரதேச செயலகம் தடை செய்துள்ள போதிலும் இராணுவத்தின் உதவியுடன் இப்பகுதியில் வெடி மருந்து மூலம் மீன் பிடித்தல் மற்றும் வர்ண மீன் பிடித்தல், சங்குகள் எடுக்கும் செயற்பாடுகள் சிங்கள மீனவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அப்பகுதி மீன் பிடி அமைப்புகள் மட்டு. மீன் பிடி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இது வரையில் எடுக்கபடவில்லை. என அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, வாகரை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக இரு கரைவலைப்பாடுகள், பிரதேச செயலகத்தின் அனுமதியின்றி அமைக்கப்;பட்டு மூன்று மாதம் கடந்துவிட்டது. இதுவரையில் அவை அகற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: