Friday, 23 May 2008

கிழக்கில் இடம்பெறும் இனவாத சீரழிவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு - ஜே.வி.பி.

கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியில் இடம்பெற்ற இனவாத சர்ச்சைகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஜே.வி.பி. அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தினால் உயிரிழந்த ஐவரது குடும்பங்களுக்கும், சொத்துக்களை இழந்தோருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவங்களினால் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் கிழக்குத் தேர்தல்களில் வெற்றி பெறுவதனை நோக்காகக் கொண்டு மேற்கொண்ட இனவாத பிரசாரங்களின் பிரதிபலனை தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக ஜே.வி.பி. சுட்டிக்காட்டுகின்றது.

இந்த இரண்டு பிரதான கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்காது, அதன் மூலம் இனரீதியாக மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கின்றது.

குறுகிய கால ஆட்சி அதிகார மோகம் காரணமாக விதைக்கப்பட்ட இனவாத வித்துக்கள் தேர்தலின் பின்னர் துளிர்விடுவதை அவர்களால் தடுக்க முடியாது போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து படையினர் கிழக்கை மீட்டெடுத்த பின்னர், பலவந்தமாக கிழக்கு வாழ் மக்கள் மீது தேர்தலை அரசாங்கம் திணித்ததாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

இந்திய ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத கொள்கைகளின் பிரதிகூலங்களை கிழக்கு வாழ் மக்களே தற்போது அனுபவித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கில் ஏற்பட்டுள்ள இனவாத முரண்பாடுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் என ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.

No comments: