Saturday, 17 May 2008

கிழக்கில் முஸ்லீம் பகுதிகளில் எதிர்பு நடவடிக்கைகள்--மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் -முஸ்லிம் எல்லைக்கிராமங்களில் பதற்ற நிலை நிலவுகின்றது

காத்தான்குடி பகுதியில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து ஹர்த்தால் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது.


காலையில் டயர் எரிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. எனினும் காவற்துறையினரின் தலையீட்டையடுத்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக காத்தான்குடி பகுதியில் நேற்று மாலையளவில் துண்டுப் பிரசூரம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூடுதலான ஆசனங்கள் எடுக்கும் கட்சிக்கு முதல் அமைச்சர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.


அந்த வகையில் பொதுஜன ஐக்கிய முன்னனியில் சேர்ந்து போட்டியிட்ட முஸ்ஸிம் தரப்பினர் கூடுதலான ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.


எனினும் ஜனாதிபதி தான் தெரிவித்த உறுதி வாக்கை நிறைவேற்ற வில்லை. எனவே முஸ்ஸிங்களுக்கான பதவி கிடைக்கும் வரை தாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய நிலையில் காத்தான்குடி ஒட்டமாவடி போன்ற பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை மட்டக்களப்பு நகரம் மற்றும் வாந்தாறுமூலை ஆகிய பகுதிகளுக்கு இன்று சனிக்கிழமை காலை வர்த்தக நடவடிக்கைக்காக சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் பிள்ளையான்குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பின் உள்வீதிகளிலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்களை மோட்டார் சைக்கிளில் தேடிச்சென்று பிள்ளையான்குழுவினர் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது வர்த்தக நடவடிக்கைக்கு சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் இன்று சனிக்கிழமை காலை 8மணியளவில் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் -முஸ்லிம் எல்லைக்கிராமங்களில் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் வர்த்தகர்கள் தாக்கப்பட்டமை குறித்து அதிகார பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாக வில்லை. இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஹிஸ்புல்லாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று நகரில் பெரும் எதிர்ப்பு நடடிவக்கைக்கு அரசியல் தலைவர்கள் தயாராகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கல்முனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி பிரதேசங்களில் இன்று காலை போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பயணிகள் வாகனங்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் காவற்துறையினரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: