| ஆய்வு: மதி | |
| 25. மே 2008 20:08 | |
கிழக்கு மாகாணத்திற்கென தனியாக தேர்தலை நடத்தி தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கிழக்கு மாகாணமக்கள் தமிழீழத்தை புறக்கணித்துவிட்டனர் என அறிக்கை விடுவது பொருத்தமற்ற கூற்றாகும். எனவே இந்த விவகாரம் பற்றி நாம் இன்று ஆராய்வது பொருத்தமான ஒன்றாகத் தான் இருக்கும் என நம்புகின்றேன். தமிழீழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முடிவடைய வேண்டுமானால் தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அப்படியோரு நிலையை அடையாதவரை தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடரத்தான் போகிறது. எனவே தமிழரின் விடுதலைப் போராட்டத்தை இல்லாதொழிப்பதற்கு எந்த ஆயுதத்தை எடுத்தும் சிங்களப் பேரினவாதம் வெல்லப்போவதில்லை. கடந்த கால வரலாற்றில் இருக்கக்கூடிய அனுபவத்தை கவனத்தில் எடுக்காது புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ஸ தமிழரை அழிப்பதற்காகத் தான் அவசரம் அவசரமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி வழிவழி வந்த பேரினவாத சிந்தனைக்கு தலைமை தாங்குவதில் சிறப்பு தேர்ச்சியை பெற்றவராக காண்பிக்க களத்தில் தீவிரமாக செயற்படுகின்றனர். இதில் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமான தேர்தலை நடத்தி முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமித்ததன் மூலம் பெரியதொரு வெற்றியை ஈட்டிவிட்டதாக எண்ணலாம். ஆனால்... இந்த விடயத்தில் கிழக்கு மாகாண தேர்தலை நடத்தியதன் பின்னர் சிங்களப் பேரினவாதிகள் தமிழீழ மக்களிடம் மேலும் அன்னியப்பட்டு தோல்வியை நோக்கிச் செல்கின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் உரமூட்டுகின்றனர். இதில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளதென பார்பதற்கு முன்ப நடந்த சில விடயங்களை மீள்பார்வை செய்வதன் மூலம் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் போராட்டம் முக்கியமாக கட்டத்தை எட்டுவதற்கு பல தியாகங்களை செய்து கொண்டே முன்னேறிய நிலையில் இருந்த போது, அதற்குள் தனது நலனிற்காக நுழைந்து கொண்ட இந்தியா தமிழீழ மக்களின் நலனின் அக்கறை கொண்டவர்கள் போல செயற்பட்டது. இதனை அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் கூர்ந்து கவனித்து இந்தியாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு இந்தியாவின் உண்மை நிலையை வெளியில் கூறினார்கள். அதனை அன்று தமிழீழ மக்கள் புரிந்து கொண்டாலும் செய்வதறியாது நிற்கவேண்டிய நிலைக்கு இந்தியாவின் செயற்பாடு இருந்தது. எனினும் இந்தியா தனது ஆதிக்கத்தை வலிந்து திணிப்பதில் கட்டிக்கொண்டு நின்றதன் மூலமாக 1987 ம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தம் செய்யபட்டு தமிழீழ மக்களிற்கு பேருதவி செய்வதாக இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது யாப்பு சீர்திருத்தம் செய்து மாகாணசபைகள் நிறுவப்பட்டு தமிழரின் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கபட்டது. வடக்கு கிழக்கை இணைப்பதில் “தற்காலிகமானது” என்ற சொல்லொன்றும் மிகவும் நுட்பமாக சேர்க்கப்பட்டது. ஒப்பந்தம் வடக்கு கிழக்கு இணைப்பு எல்லாவற்றிலும் ஏமாற்று பொதிந்திருப்பது வெளிப்படை எனினும் அதனைப் புரிந்து கொள்வது கடினமானதாக அவர்கள் (இந்தியாவும் – சிறீலங்காவும்) பரப்புரைகளினை மிகத் தீவிரமாக செய்திருந்தனர். இதேவேளை மதின்மூன்றாவது யாப்பு திருத்தம் மூலம் மாகாணசபைகளிற்கு கவனத்தில் கொள்ளபட வேண்டிய அளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பினும், அதற்கு சமமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கபடவில்லை. அதேபோல் தேவையான போது அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்ளும் தன்மையினையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இந்தமாதிரியான நிலையில்.... அன்று (1987) விடுதலைப்புலிகள் மண்டியிடவோ அல்லது இனவிடுதலைப் போராட்டத்தை விற்கவோ தயாரில்லாமையினால் இந்தியாவையே விடுதலைப்புலிகள் எதிர்த்தனர். இந்தியாவோ விடுதலைப்புலிகளை ஓரம்க்கடிவிட்டு தனது சொல் கேட்டு நடக்கக்கூடிய பிள்ளையொன்றிடம் பதவியொன்றை வழங்கி தனது நலன்களைப் பார்க்கலாம் என்றெண்ணி தமிழரின் நலனை கவனமெடுக்காது சனநாயகம் என்ற மகுடத்தை எடுத்து ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றத் தொடங்கியது. அதன் உச்சக்கட்ட நடவடிக்கையாக வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைத் தேர்தலை நடத்தி வரதராஜப்பெருமாளை முதலமைச்சர் ஆக்கியது. கூத்துப்போட்டார்கள். இந்தியப்படை வெளியேறியது. ஆகா சிங்களப்பேரினவாத அரசு எந்த அதிகாரங்களையும் தரவில்லையே என அறிக்கைவிட்ட வரதராஜப்பெருமாள் பதவியை விட்டு விலகி தமிழீழப்பிரகடனத்தை செய்துவிட்டு ஓடினார். துரோகிகளுக்கு பேரினவாத அரசு கொடுக்கும் பரிசு தீர்வுத்திட்டம் எதையாவது முன்வைப்பதோ, சமாதானப் பேச்சை நடத்துவதோ, பதவிகளை வழங்கி அதிகாரம் தருகின்றோம் எனச் செல்லுவதோ அனைத்தின் ஊடாகவும் சிங்களப் பேரினவாதிகள் தமிழரை ஏமாற்றுவார்கள் என்பதை அவர்களுடன் கூடச் சென்று ஓட்டி வாழ்ந்தவர்களே நன்கறிவார்கள் என்பதற்கு வரதராஜப்பெருமாள் நல்லதொரு சுட்டிக்காட்டத்தக்கவராக உள்ளார். இதனைப் புரிந்து கொள்ளாது நடந்தவர்களை சிங்களப் பேரினவாதிகள் என்ன செய்தார்கள் என்பதற்கு வெளிநாட்டமைச்சராக இருந்த கதிர்காமரைக் கூட நாம் நினைத்துக் கொள்ளலாம். தமிழ் தெரியாத தமிழராக இருந்த இவர் உலகத்திற்கு தமிழரையே பயங்கரவாதிகள் எனச் சொல்லும் வேலைஇயனை கச்சிதமாகச் செய்துவந்தவர். இவரிற்கு ஒரு கட்டத்தில் பிரதமர் பதவி வழங்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்த்தாக பேசப்பட்டது. அது இவர் தமிழினத்தை சேர்ந்தவர் என்பதற்காக ஓரம் கட்டும் வேலையினைச் செய்தவர்கள் இவர் ஒட்டியிருந்தவர்களில் முக்கியமானவர்களேனர் காரணமாக இருந்தனர். காரணம் சிங்களப் பேரினவாதிகளிற்கு எவர் எதனைச் செய்தாலும் தமிழர் என்ற ஒரு காரணத்திற்காக எந்த உரிமையினையும் கொடுக்கமாட்டார்கள். வரதராஜப்பெருமாள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், ராசிக் சிறிலங்காப் படையுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக செயற்படப் புறப்படும் போது, அவரின் அமைப்பு சார்ந்தவர்கள் சிறிலங்கா படையாட்களுடன் இணைந்து செயற்படுவது நல்லதல்ல என்று சில விடயங்களை எடுத்துக் கூறினர். ராசிக் கேட்கவில்லை. சிறிலங்காப்படையின் துணைப் படையாக செயற்பட்டார். கூடவே சுமார் இருநூறு பேரளவில் கொண்டு சென்றார். எதனைச் சாதித்தார்? கூடவே அழைத்துச் சென்ற இளைஞர்களின் படையும், படைப்புலனாய்வாளர்களும் அவர்களுடன் கூடச்செல்பவர்களிடம் உறிஞ்சக் கூடியதை உறுஞ்சிவிட்டு உதறிவிடுவது தான் வரலாறு. கூட நிற்பவர்களிற்கு இந்த நிலமை என்றால் ஏனைய தமிழரை சொல்லவா வேண்டும்? குறிப்பிட்ட இந்த விடயத்தை இங்கு பார்ப்பதற்கும் காரணம் உள்ளது. கிழக்கில் இன்று சிங்களப் பேரினவாதிகளுடன் நிற்பவர்கள் என்னவாகப்போகின்றனர், என்பதற்கு வரலாற்றை மீளப்பார்பது சிறப்பானது. தாங்கள் சோரம் போய்விட்டு அதற்கு கிழக்கு மாகாணமக்களே தந்த ஆணை என்று சொல்வது வெறுங்கதையாகும். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நில வன்பறிப்பு மூலமான திட்டமிட்ட சிங்களப் பேரினவாதிகள் படுகொலை செய்தது.(குறிப்பிட்டு மூன்று மாவட்டங்களிலும் ஒவ்வொரு படுகொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டுவதற்காக போர்போமெனில் உடும்பன்குளம் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, பன்குளம் படுகொலை எனச்சொல்வதானால் பட்டியல் நீண்டு செல்லும். இவ்வாறு ஏராளம் கதைகள் உள்ளன. துன்பக்கடலில் குழித்த மக்கள் ஒருபோதும் விடுதலை உணர்வை களைந்தெறிய மாட்டார்கள். தமிழர் தாயகத்தைப் பேரினவாதிகள் பிரித்தெடுத்ததன் மூலம் வென்று விட்டார்கள் என்று முடிவெடுத்து விட முடியாது. ஏற்கனவே தமிழர் தாயகத்துள் தமிழரை சிறுபான்மையினராக்கி விடவேண்டுமென்பதில் நெடுங்காலமாகவே திட்டமிட்ட செயற்பாட்டின் ஒரு வடிவம் தான் கிழக்கு மாகாணசபை என்ற தனிக்கூறாக்கலாகும். சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் போது அரசியல் பொதி ஒன்றைக் கொண்டுவந்து வெட்டிப்பிரித்து ஒன்றுமில்லாதகாக்கிய கதை யாவரிற்கும் தெரிந்தவொன்று தான். ஆனால் இதன் போது “சங்க சபாவ” என்ற கூட்டமொன்றை செய்த பிக்குகள். இந்த ஒன்றுமில்லாத பொதியை வைத்துக்கொண்டு விவாதமொன்றைச் செய்தார்கள். வடக்கு கிழக்கை இணைத்து வைத்திருக்க முடியாது. வடக்கு கிழக்கில் காணி தொடர்பான விவகாரம் தனிப்பிரச்சனையாக ஆக்கிவிடாது மத்திய அரசு தான் பார்க்கவேண்டும். மொழி சிங்களம் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார்கள். குறிப்பிட இத் தீர்மானத்தில் சொல்லபடும் விடயம் பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடு. இதன் மூலம் பெளத்த பிக்குகளும் சரி சிங்களப் பேரினவாத கட்சிகளும் சரி ஒரே தடத்தில் தான் செல்கின்றனர் என்பது புலனாகின்றது. அவர்கள் வடக்கு கிழக்கை துண்டாடுவதற்கு பல உத்திகளை கையாண்டவர்கள். 1964 ம் ஆண்டு தமிழீழத்தின் இதயமண் மணலாற்றில் துரித மகாவலி திட்டமூடாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் செய்யபட்டது. அன்றைய இந்தத் தொடக்கம் மணலாற்றை சிங்களமொழியில் வெலியோயா என்று வலிந்தழைத்து பூர்வீக தமிழ்க்குடிகளை விரட்டும் வேலைகளையும் முடிக்கிவிட வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியாகவே 1984 ம் ஆண்டு மணலாற்றின் பல கிராமங்களில் இருந்து தமிழ்மக்களை துன்புறுத்தி விரட்டினார்கள். இந்த வேலையும் வடக்கு கிழக்கை வேறொரு வடிவத்தில் துண்டு போடுவற்கான வேலையாகத்தான் செய்து வரப்பட்டது. அதனால்தான் மகாவலிஅபிவிருத்தி திட்டத்திற்கான செயலகம் ஒன்று “சம்பத்நுவர” (வலிந்து வைக்கப்பட்ட சிங்களப் பெயர்) என்ற இடத்தில் இயங்கி வருகின்றது. தமிழீழத்தை கூறு போகும் செயற்பாட்டை புதிதாக மகிந்த ராஜபக்ஸ முதற்தடவையாக கையில் எடுக்கவில்லை. காலகாலமாக பேரினவாதிகள் கவனித்து வந்த விடயம் தான் இது. ரணில் – பிரபா ஒப்பந்தத்தில் சமாதானம் பேசப்படும் போது ரணில்விக்கிரமசிங்கவின் தரப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாண தேர்தல் நடத்துவது தொடர்பாக யோசனையொன்று முன்வைக்கபட்டது. இப்பொழுது மகிந்தராஜபக்ஸ செய்யும் வேலையை வேறொரு வடிவத்தில் செய்யும் நோக்கத்தோடு தான் இந்த யோசனை முன் வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இது பொருத்தமற்ற விடயம் என மறுதலித்திருந்தார். 1987 ஆம் ஆண்டு மாகாணசபை வேட்பாளர்களை கொலை செய்த ஜே.வி.பி தான். வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருப்பது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமையினை பாதிக்கின்றதென கூறி சிறீலங்கா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்து உண்மையில் தமிழ்மக்களின் உரிமையினை காலிற் போட்டு மிதித்து நசுக்கும் பேரினவாதிகள் உரிமை பற்றி அக்கறை கொண்டது நகைப்பிற்கிடமானது தான். இதில் தான் நாம் மீண்டும் ஒன்றை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் சிங்களப் பேரினவாதிகள் ஒரே தடத்தில் நடக்கின்றனர். போதாக்குறைக்கு தன்னினத்தில் குருதி சுவைக்கும் கோடரிக்காம்புகளையும் அரவணைத்து இவர்கள் தமிழர்கள் இந்தா பாருங்கள் அமைச்சர், முதலமைச்சர் என உலகை ஏமாற்றுகின்றனர். (இன்னும் எவ்வளவு காலம் தான் ஏமாற்றுவார்கள்.) இவை அனைத்தையும் எதிர்த்து வெல்வதென்பது சாதாரணமானதல்ல அந்த வியக்கத்தக்க பணியை விடுதலைப் புலிகள் சரியாகச் செய்து வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியைப் பாருங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்கின்றபோது கூறியது. சிங்கள மக்களையும் உலகையும் ஏமாற்றுவதற்காகத் தான் இந்த தேர்தல் நடக்கின்றது. தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழல் கிழக்கில் இல்லை. எனவே நாம் போட்டியிடமாட்டோம் என 10 மார்ச் 2008 அன்று நடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவில்லை ஆனால்.... 10 மே 2008 அன்று நடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. இரண்டு மாதத்தில் சுமுக நிலை ஏற்பட்டதா? காரணம் என்னவென்றால் கிழக்குமாகாணத்தில் நடைபெறும் தேர்தலை ஐக்கிய தேசியக்கட்சி புறக்கணித்தால்...ஐக்கிய தேசியக்கட்சி கிழக்கை பிரித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எதிர்ப்பிரச்சாரம் ஒன்றைச் செய்யக்கூடிய வாய்ப்பினை ஐக்கிய தேசியக்கட்சியே வழங்கி விடுவதை தடுப்பதற்கும், நாமும் கிழக்கை தனியே பிரிப்பதை மறைமுகமாக ஆதரிக்கின்றோம் என காண்பித்து தமது வாக்கு வங்கிச் சரிவை தடுக்கவுமே மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டது. இன்று மீண்டும் தேர்தல் நீதியாக நடைபெறவில்லை எனக் கூறிக்கொண்டு நீதிமன்றம் நோக்கிச் செல்வதெல்லாம் அவர்களின் சித்து விளையாட்டுகளில் ஒன்று தான். இஸ்லாமியத் தமிழர்கள் முஸ்லீம்களைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக பெரும்பாலும் பிழைப்பை முன்னிறுத்துவதாகவே தெரிகிறது. அவர்களின் அரசியல் போக்குப்பற்றி தனியாக வேறொரு தளத்தில் ஆராய்வோம். மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணம் தனியாக்கபட்டு அங்கு தேர்தல் நடத்துவது தமக்குச் சாதகமானதென குதூகலித்தவர்களிற்கு ஒன்றை மட்டும் எடுத்துக் கூறவேண்டும். இலங்கைத்தீவிற்குள் இஸ்லாமியத் தமிழராக வாழ்வதா அல்லது சிங்கள இஸ்லாமியராக வாழ்வதா நல்லது. சிங்களப் பேரினவாதிகள் ஒருபோதும் இஸ்லாமியச் சிங்களவராக வாழ விடப்போவதில்லை. இலங்கை அன்னியரின் பிடிக்குள் இருந்தபோதே 1915 ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழரின் உரிமைகளை சிங்களப்ப பேரினவாதிகள் அழிக்கத்தொடங்கிவிட்டனர். அல்லது அவமதிக்கத்தொடங்கிவிட்டனர். தமிழர் தாயகத்திற்குள் இருபத்துநான்கு வீதமாக வாழ்வதா? சிறீலங்காவில் ஏழு வீதமாக வாழ்வதா என முடிவெடுத்து அரசியல் வேலைகளை செய்யவேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது. எனவே 1963 ஆம் ஆண்டு நிர்வாகத் தேவைக்கென அம்பாறையையும், மட்டக்களப்பையும் பேரினவாதிகள் பிரித்தார்கள். அப்போது அம்பாறையில் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டதை நிறைவேற்றுவார்கள் என்பதை புரியாதவர்கள் போல் இருந்த முஸ்லீம்கள் அதனை வரவேற்றார்கள். காரணம் அம்பாறையில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் இருந்தமையால். இன்று அம்பாறை “திகாமடுல” என்ற சிங்களப்பெயருடன் தேர்தல் தொகுதியாகியுள்ளது. என்ன நிலமையில் உள்ளதென்பதை விளக்கித்தால் புரிந்து கொள்ள வேண்டுமென்தில்லை. இதனை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால்... கிழக்கு மாகாணத்தை தனியாக கொண்டுவரும்போது முஸ்லீம்களே குதூகலிக்காதீர்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலை என்னவென பார்போமெனின் அவர்கள் சரியான தடத்தில் நடைபோடுகின்றனர். விலை போகவில்லை எனவே தமிழ்த்தேசியம் தொடர்பாக அக்கறை உடைய அவர்களின் பணி தொடரட்டும் எதிர்ப் பரப்புரைக்காரர் தமித்தேசிய கூட்டமைப்பினரை புலிகளின் ஆயுதங்களுக்கு பயந்தவர்கள், புலிகளின் அடிவருடிகள் எனச் சொல்லுகின்றனர். சிங்களப் பேரினவாதிகள் தமிழரை அழிக்க நீட்டாத ஆயுதமும் உள்ளதா? அவர்களின் ஆயுதங்களுக்கு பயப்படாதவர்கள் புலிகளின் ஆயுதங்களுக்ககு பயப்படப் போகின்றார்களா? எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமான உள்ளுராட்சித் தேர்தலையும், மாகாணசபைத் தேர்தலையும் புறக்கணித்தது மிகமிச் சரியானதே. இப்படி விலைபோகாத அரசியல்வாதிகளால் தமிழீழப்போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்லும். கிழக்கை மையப்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளிற்குள் பிளவொன்று வந்தது. இது விடுதலைப் போராட்டத்திற்கு புதியதொரு எதிரணியினரை உருவாக்கியது. ஆனால் தமிழ்மக்கள் தமிழீழம் என்பதனை வெறுக்கத் தயாரில்லை. இந்த நிலையில் இன்று கிழக்கு மாகாண மக்கள் தமிழீழத்தை புறம் தள்ளி விடுமளவிற்கு அரசியல் அறிவற்ற கூட்டமல்ல. ஏனெனில் தமிழீழம் பிறப்பெடுத்ததே கிழக்கில் தான். 19 மே 1972 அன்று மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைக் கூட்டணியின் மகாநாட்டின் போது கட்டப்பட்ட பாதாதையில் “தமிழீழம் தமிழர் தாயகம் “ என்றெழுதப்பட்டிருந்தது. ஈழம் தமிழீழமான கிழக்கில் தமிழீழத்திற்காக ஏராளம் உயிர்கள் ஈகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியான உண்மைகளின் முன்னால் கிழக்கு மாகாண மக்கள் தேர்தல் பித்தலாட்டம், வன்முறைகள், மிரட்டல்களின் போக்கினை உணர்ந்து அதற்கேற்றால் போல் நடந்தார்களே தவிர தமிழீழத்தை புறம் தள்ளி விடவில்லை. இனி எந்தக காலத்திலும் அப்படியொரு எண்ணம் கொள்ளவும் போவதில்லை. கிழக்கு மாகாணற்கென தனியான நிர்வாகம் கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணச் செயலாளர் ஹேரத் அபேவீர நியமனம் பெற்ற பின் அவரை இனம் தெரியாதவர்கள் சுட்டுக்கொன்றனர். கிழக்கு மாகாண தேர்தல் அன்று திருமலை துறைமுகத்திற்குள் கப்பலொன்று மூழ்கியது. அம்பாறையில் 81 மில்லிமீற்றர் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஏற்பன்று கொழும்பில் குண்டு வெடிக்கிறது. இப்படியான நிலமையில் உலகை ஏமாற்ற கூடிய வகையில் தெரிவு செய்துகொள்ளப்பட்ட முதலமைச்சர் சார்ந்த கட்சி கூடிய உறுப்பினர்களை வெற்றி கொள்ளவில்லை. முஸ்லீம் தரப்பினரே கூடிய உறுப்பினகளை பெற்றிருந்தது. எனவே தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி உலகிற்கு தமிழ் முதலமைச்சரை பாருங்கள், தமிழ் முதலமைச்சரைப்பாருங்கள் என காண்பிப்பதற்கென்றே வேறெதுவும் இதற்குள் கிடையாது. அத்துடன் இப்படியான தமிழரிற்கான பதவிகள் புதிய தொழில் நுட்பத்துடன் தமிழரை அழிப்பதற்கான ஆயுதமான தான் சிங்களப் பேரினவாதிகள் இது போன்றவற்றை செய்கின்றனர். இது போன்றவற்றிற்குள் அன்னிய சக்திகளின் தலையீடும் உள்ளதென்பதனை மறுப்பதற்கில்லை. 1987 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர் பதவியும், பல கோடிக்கணக்கான பணமும் தலைவர் பிரபாகரனுக்கு இந்தியா வழங்க முன்வந்தது. அன்று தலைவர் பிரபாகரன் தனக்கு பதவியோ பணமோ தேவையில்லை, தமிழ் மக்களின் பாதுகாப்பும், உரிமையும், கெளரவமான வாழ்வும் தான் தேவை என்றார். ஒரு புனிதமான விடுதலைப் போராட்டடத்தின் தலைவர் கொள்கையில் உறுதியுடன் செயற்பட்டார். இன்றும் என்றும் அவர் அப்படியே தான் . எனவே எவர் எந்தப் பதவியை ஏற்றாலும், எந்தத் தந்திரத்தை பிரயோகித்து சதி செய்தாலும் தமிழீழ மக்கள் தமிழீழத்தை வெறுக்கப்போவதில்லை. thank you:swiss murasam |
Sunday, 25 May 2008
தலைவர் பிரபாகரன் முதலமைச்சராகாதது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)

கிழக்கு மாகாணத்திற்கென தனியாக தேர்தலை நடத்தி தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கிழக்கு மாகாணமக்கள் தமிழீழத்தை புறக்கணித்துவிட்டனர் என அறிக்கை விடுவது பொருத்தமற்ற கூற்றாகும். எனவே இந்த விவகாரம் பற்றி நாம் இன்று ஆராய்வது பொருத்தமான ஒன்றாகத் தான் இருக்கும் என நம்புகின்றேன்.
No comments:
Post a Comment