Saturday, 17 May 2008

பிள்ளையானின் முதலமைச்சர் பதவி உசலாடுகிறது. கருணா நாடு திரும்புகிறார்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும்கூட எதிர்காலத்தில் முதலமைச்சுப் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய நிகழ்தகவுகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக இவ்வார இறுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்; தலைவர் கருணா அம்மான் இலங்கை வர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


கருணா அம்மான் வந்த பின்பு எத்தகை மாற்றங்கள் ஏற்படுமென்று தற்போதைக்குக் கூற முடியாது.

மறுபுறமாக கூட்டணியின் போனஸ் ஆசனங்களில் ஒன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாக தற்போது லண்டனில் வசித்துவரும் முன்னாள் உதவி அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.


தென்பகுதியில் அரசியல் விமர்சகர்களின் கருத்துப் பிரகாரம் எதிர்காலத்தில் மௌனகுருசாமி அவர்கள் முதலமைச்சராக வரக்கூடிய நிகழ்தகவுகள் உண்டு என கருத்துத் தெரிவித்துள்ளனர். இவ்விரு கருத்துகளும் ஊகங்களாக உள்ளனவே தவிர தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிக் கருத்தாக இல்லை என்பதையும் அவதானித்தல் வேண்டும்.


யார் முதலமைச்சராக வந்தாலும் நிச்சயமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி சார்ந்தவராகவே இருப்பார் என்று எதிர்பார்க்க முடியும்.

மேலும் 13வது திருத்தச்சட்ட மூலத்தின் பிரகாரம் ஒரு மாகாணசபையில் முதலமைச்சர் நீங்கலாக 4 அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படும். தற்போது 3 அமைச்சுப் பொறுப்புக்களே வழங்கப்பட்டுள்ளன.


இன்னும் ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும். அதேநேரம், மாகாணசபை சபாநாயகரும் இன்னும் நியமிக்கப்படவில்லை. இப்பதவிகள் தற்போது மாகாணசபையில் புதிதாகத் தோன்றியுள்ள பிரச்சினையைக் கருத்திற்கொண்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தியப்பிரமாண வைபவத்தைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியில் கிழக்குத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியுடன் உரையாடினர்.


அவர்கள் மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக தமது கருத்துக்களைத் தெரிவித்த அதேவேளை, வெற்றியீட்டிய கட்சிகளின் தலைவர்களினது கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு இது சம்பந்தமாக தீர்மானிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments: