Sunday 15 June 2008

கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரோயல் கல்லூரியின் திருடனா?


பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார்.

எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்குப் பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.

எனினும் கேஹலிய ரம்புக்வெலயின் மகன் தமது குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவருக்கு 6 மாத காலத்திற்குப் பாடசாலை நடவடிக்கைகளில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை வழங்கப்பட்டவுடன் கல்லூரிக்கு தமது பாதுகாப்பு அதிகாரிகளுடன் விஜயம் செய்த அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல அதிபரைத் தமது மகன் மீதான தடையை நீக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு தடையை நீக்காவிட்டால் அதிபரையும் உப அதிபரையும் வவுனியாவுக்கு இடமாற்றம் செய்யப் போவதாகவும் அமைச்சர் அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் மகன் மீதான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு இன்று நடைபெறும் பாடசாலை கிரிக்கட் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பாக ரோயல் கல்லூரியின் பழைய மாணவனான சட்டமா அதிபர் சி ஆர் டி சில்வாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வாரம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments: