Saturday 14 June 2008

டிலான் பெரோ நீதிமன்ற அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானம்

அமைச்சரவை சாரா நீதிமன்ற அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் டிலான் பெரேரா பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை சாரா துறைமுக அமைச்சுப் பதவியை மாத்திரம் வகிக்க அவர் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டிலான் பெரேரா நாடு திரும்பியவுடன் தமது நீதிமன்ற அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற அமைச்சர் டிலான் பெரேராவிற்கும், அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத்திற்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை நீடித்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ நீதிமன்ற அமைச்சின் செயலாளரை பாதுகாத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை சாரா அமைச்சுக்களிலிருந்து பதவி விலகி, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கடமையாற்றத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பின்வரிசை அமைச்சர்கள் சிலர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

டிலான் பெரேரா, மேர்வின் சில்வார், ஜகத் புஸ்பகுமார, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

No comments: