Wednesday 11 June 2008

வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 19 படையினர் பலி-23 பேர் படுகாயம்

வவுனியா மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிகடிக்கப்பட்டுள்ளது. இதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

பின்தளங்களில் இருந்தான பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களின் சூட்டாதரவுடன் படையினர் நேற்று புதன்கிழமை காலை 6:00 மணியளவில் வவுனியா குஞ்சுக்குளம் பகுதி ஊடான முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக நேற்று மாலை 6:30 மணி வரை விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

இதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 23-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் வெடிபொருட்களும் சூனியப் பிரதேசப் பகுதியில் காணப்படுகின்றன.

அவற்றை எடுக்க முயற்சிக்கும் படையினர் மீதும் விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார் அவர்.

எனினும் நேற்றைய மோதலில் விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்பை இலங்கை இராணுவம் ஏற்படுத்தியதாகவும் படைகள் முன்னோக்கி நகர்ந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments: