Friday 13 June 2008

யாழ் சிறைச்சாலை வாகனத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் பலி

யாழ்ப்பாண சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் மீது வெள்ளைவான் குழுவினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்து இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் செல்வராஜா ஜெனரிக்ராஜ் (17), தங்கராஜா சுலோஷன் (17) ஆகிய இருவரும் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். யாழ் சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறைச்சாலை வாகனம் சுண்ணாகம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளை வானொன்றில் பின்தொடர்ந்த ஆயுதக்குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்ட ஜெனரிக்ராஜ் என்வரின் தாய் தந்தையர் இனந்தெரியாத ஆயதக்குழவினரால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரும் அவருடைய சகோதரியும் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்திருந்தனர்.

யாழ் சிறைச்சாலை ஆணைக்குழுவுக்கு போதியளவு வாகனங்கள் இன்மையும் இன்றைய சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருப்பதாக யாழ் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments: