Saturday 14 June 2008

கடுகதி ரயிலுடன் டிப்பர் வாகனமொன்று மோதியதில் இருவர் பலி

கம்பஹா மீரிகம பிரதேசத்தில் நேற்றுக்காலை கடுகதி ரயிலுடன் டிப்பர் வாகனமொன்று மோதியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

விஜய ரஜதபன என்ற இடத்திலுள்ள ரயில்வே கடவையில் நேற்றுக்காலை 8.20அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் கடுகதி பயணிகள் ரயிலின் பயணத்தையொட்டி ரயில்வே கடவை மூடப்பட்டு அபாய சமிக்ஞை காட்டப்பட்டிருந்தபோதிலும் அதனைப் பொருட்படுத்தாது சாரதி, ரிப்பர் வாகனத்தை ரயில்வே கடவைக்கு குறுக்காக செலுத்தியமையால் ரிப்பர் வாகனம் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டதில் சாரதியும் கடவைக்கு அருகே நின்று கொண்டிருந்த சமிக்ஞையாளரும் உயிரிழந்துள்ளனர்.

சமிக்ஞையாளர் பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தபோதும் ரிப்பர் வாகன சாரதியின் கவனயீனத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக மீரிக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் காரணமாக ரயிலுக்கோ அதில் பயணம் செய்தவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் பொலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: