Thursday 12 June 2008

குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு புலிகள் தயாராகின்றனர்: யாழ். இராணுவத் தளபதி

யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளின் பிரதிநிதிகளை பலாலியில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளால் குடாநாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யாழ். நகருக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது.

எனவே குடாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக யாழ். குடாக்கடலில் மீன்பிடிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை ஒருவார காலத்திற்கு இருக்கும். அத்துடன் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நேரத்தையும் அதிகரித்துள்ளோம்.

ஊரடங்குச் சட்ட நேரம் இரவு 7:00 மணிமுதல் 5:00 மணிவரை இருக்கும். ஏற்கனவே இருந்ததை விட இது 2:30 மணிநேரம் அதிகமாகும்.

அத்துடன் படையினரின் வாகனத் தொடரணிகள் செல்லும் வீதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுமக்கள் போக்குவரத்து தடையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

படையினரின் வாகனத் தொடரணி பயணிக்கும் பாதையை கடப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரச உயர்மட்டம் பணித்ததற்கு இணங்க குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் சிறப்புத்திட்டத்தை படையினரும் காவல்துறையினரும் உடனடியாக மேற்கொள்ளவுள்ளனர்.

இத்திட்டத்தின் பிரகாரம் குடாநாட்டு பத்திரிகை நிறுவனங்களுக்கு வெளியே படையினர் சுற்றுக்காவலில் ஈடுபடுவர். இதற்கு பத்திரிகை நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டின் தென்கரையோரப் பகுதி ஊடாக எதிர்வரும் 19, 20 ஆம் நாட்களில் தாக்குதல் நடத்திக்கொண்டு குடாநாட்டுக்குள் நுழையப் போகின்றோம் என்று யாழ். குடாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் புலிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்ற ஒரு செய்தி குடாநாட்டில் பரவியுள்ளதையடுத்தே யாழ். மாவட்டத்தில் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுககளை படையினர் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

puthinam.com

No comments: