Sunday 17 August 2008

வன்னியில் மனிதாபிமான நெருக்கடி, பாம்புக் கடியில் 23 பேர் பாதிப்பு, தொற்றுநோய் பரவும் ஆபத்து - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள்

வன்னியில் உக்கிரமாக மோதல்கள் தொடரும் நிலையில் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்து வருவதால் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் பெரும் திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இருப்பிடங்களைவிட்டு வெளியேறியோர் தொகை தற்போது 2 இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.



இராணுவ நடவடிக்கை காரணமாக 5 முறை இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி புதுமுறிப்பு பாடசாலையில் தங்கியுள்ள சிறுவர்களே இவர்கள் உணவுகள் சீரானமுறையில் கிடைக்கப்பெறாத நிலையில் பசியினால தக்காளிப்பழத்தினை உட்கொள்ளும் காட்சி
படப்பிடிப்பு க.ப.பிரபு


இன்று தங்கியிருக்கும் இடத்தில் நாளைக்கும் தொடர்ந்து இருக்க முடியுமா என்ற நிச்சயமற்ற, நிலையற்ற, பதற்றமுற்ற பேரவல நிலையிலேயே வன்னியில் மக்கள் நாள்களை கழிக்க நேரிட்டுள்ளது. களநிலைமை மோசமடைய, மோசமடைய மக்களின் அன்றாட வாழ்க்கையும் மேலும் மேலும் சீரழிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை 10 லொறிகளில் உரமும் 2 லொறிகளில் உணவுப் பொருட்களும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

ஏற்கனவே வாரத்தில் 5 தினங்களில் 20 லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இதற்கு மேலதிகமாக சனிக்கிழமைகளில் மட்டும் உரமும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்துள்ள அகதிகளை க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லையாயினும் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை பரீட்சை நடைபெறாத பாடசாலைகளில் அனுமதித்துள்ளோம்.

இன்று நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைக்காக இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள பாடசாலைகளில் சில மண்டபங்களை ஒதுக்கியுள்ளோம்.

எமக்கு உலர் உணவுப் பொருட்கள் ஒழுங்காக கிடைக்குமாயின் எந்த பிரச்சினையுமில்லை. எமக்கு அரிசியே அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஓரளவு தேவையான அரிசி உள்ள நிலையில் பருப்பு, சீனி, மா போன்றவை அதிகமாகக் கிடைத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணங்களை உரிய முறையில் மேற்கொள்ள முடியும்.

இதேவேளை, ஆஸ்பத்திரியின் மின் பிறப்பாக்கி மற்றும் பாவனைக்கு எரிபொருளின் தேவை அதிகமாக தேவைப்படுவதனால் இதன் அளவை அதிகரிக்குமாறு நான் கோரிக்கை விடுத்ததையடுத்து இதனை அதிகரிப்பதற்கு அரசு இணங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் கருத்துத் தெரிவிக்கையில்;

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 31,080 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,267 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. நாம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. முகவரமைப்புக்களுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றோம்.

அத்துடன் இடம்பெயர்ந்தோருக்கான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளை மேற்கொள்ளும் அதேநேரம் உலக உணவுத்திட்டம் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் உதவியைக் கொண்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கு ஏற்ற வகையில் உதவிகள் போதாமல் உள்ளது.

இதேவேளை, பருவகால மழை தொடங்கவுள்ள நிலையில் ஏற்கனவே நெரிசலுடன் வாழும் இம்மக்களுக்கு தொற்று நோய் ஏற்படுவதற்கான பிரச்சினை உள்ளது.

தற்போது இடம்பெயர்வோர் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குடும்பம் குடும்பமாக மரங்களின் கீழ் வாழும் குடும்பங்களின் தொகை அதிகரித்து வருகின்றது.

இவர்களுக்கு தற்காலிக வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உதவிகள் தேவையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்;

கிளிநொச்சி மாவட்டத்துக்கான மூன்றாம் காலாண்டுக்கான மருந்துகள் எமக்கு கிடைத்துள்ளது. எனினும் சில வகையான பொருட்கள் அதாவது பனடோல் சிரப் போன்றவை வரவில்லை.

வைத்தியசாலைகளின் செயற்பாட்டுக்கு வழங்கப்பட்ட எரிபொருளின் (டீசலின்) அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் தேவைக்கு மாதாந்தம் 15 ஆயிரம் லீற்றர் டீசல் வழங்கப்பட்டுவந்தது. கடந்த ஜனவரி தொடக்கம் அந்த அளவு 6250 லீற்றராக குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2500 லீற்றராக குறைக்கப்பட்டு விட்டது.

இதன் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலை இயங்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர், குடியமர்வதற்கு பொருத்தமற்ற காடுகள், வாய்க்கால்கள், வீதிகளில் தங்கியுள்ளதனால் பாம்புக்கடிக்கு பலர் இலக்காகியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் மட்டும் 23 பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றுள்ள நிலையில் இதனால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுநோயால் மரணித்தவர்கள் தொடர்பில் எமக்கு தெரியாமலேயே சடங்குகளை மேற்கொள்வதால் உண்மையான விபரங்கள் எம்மிடம் இல்லை.

கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவானோர் கிளிநொச்சிக்கே வந்துள்ளனர்.

வரவிருக்கும் பருவ மழை காலத்தில் பலர் தொற்று நோய்க்கு இலக்காவதற்கு இடமுண்டு. இவர்களுக்கு போசாக்கான உணவு கிடைக்காத நிலைமை அதிகரித்து வருகின்றதனால் ஆபத்து அதிகமாகவுள்ளது.

எனினும் இடம்பெயர்ந்தவர்களை தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இதனை எதிர்காலத்தில் சமாளிப்பதற்கு தேவையானவற்றை மேற்கொள்வதற்கும் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்துக்கு எவரும் இடம்பெயர்ந்து வரவில்லையென வவுனியா மாவட்ட அரச அதிபர் தெரிவித்ததுடன் தீயினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த முகாமிலுள்ளோரை தற்காலிகமாக தங்க வைத்துள்ளோம். இவர்களை மீள குடியமர்த்துவதற்கு பொருத்தமான இடம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

No comments: