Sunday 17 August 2008

(2ND LEAD) தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தீர்க்கமான மோதல்களின் போது விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும் என கருணா தெரிவித்திருந்தார்.

எனினும் விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுத பலம் இருப்பது குறித்து இராணுவ புலனாய்வுதுறையினருக்கு ஒருபோதும் தகவல்கள் கிடைக்கவில்லை என இராணுவ பேச்சளர் கூறியிருந்தார். இந்த நிலையில் கருணாவிடம் இந்த விடயம் குறித்து கேட்டபோது.

தான் கூறுவது உயிரியல் இரசாயனம் தொடர்பாக அல்ல எனவும் விடுதலைப்புலிகளிடம் அமோனியம் நைத்ரையிட் இரசாயன பொருள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பது குறித்தே தான் கூறியதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரசாயனத்தை விடுதலைப்புலிகள் தமது ஆயுத தயாரிப்பின் போது பரீட்சித்து பார்த்ததாகவும் அது வெற்றியடைந்தது எனவும் கருணா கூறியுள்ளார்.

இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் அந்த ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமோனியம் நைத்ரையிட் இரசாயனம் பசளைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதால், உலகில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்த இரசாயனத்தை சந்தேகமின்றி சேர்த்துக்கொள்ள முடியும் என்பதால் ஆயுதங்களைச் செய்ய இதனை இலகுவாக பயன்படுத்தி வருவதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


அமோனியம் நைத்ரையிட் இரசாயனத்துடன் எரிபொருளுக்கு பயன்படுத்தும் ஏ.என்.எப்.ஓவை பயன்படுத்தி செய்யப்படும் ஆயுதங்களில் அணுக்குண்டினால் ஏற்படுத்தகூடிய அழிவினை ஏற்படுத்த முடியும்.

அமோனியம் நைத்ரையிட் 500 கிலோ கிராமினால் கட்டிடம் ஒன்றை தரைமட்டமாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. அல்-கைதா அமைப்பு இந்த இரசாயனத்தின் மூலம் எவ்வாறு குண்டுகளை செய்யலாம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.


விடுதலைப்புலிகளின் இரசாயன ஆயுத பிரிவும் சாம் ஏவுகணை பிரிவும் மற்றும் ஆழஊடுருவும் படையணி ஆகியன அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி கட்டுபாட்டில் இருப்பதாக கருணா கூறுகிறார்.


சாம்-11- சாம்-05 மற்றும் சாம் 7 போன்ற ஏவுகணைகள் விடுதலைப்புலிகளிடம் இருப்பதாகவும் கபீர் மற்றும் மிக் தாக்குதல் விமானங்களை இந்த ஏவுகணை மூலம் தாக்க முடியாவிட்டாலும் உலங்கு வானூர்திகளை தாக்க முடியும் எனவும் கருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் பிரபல இராணுவத் தலைவர்களான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன ஆகியோர் பயணித்த வாகனம் கண்ணிவெடியில் சிக்கிய போது அது அரசியல் சூழ்ச்சி என தெற்கில் கருத்தொன்று நிலவிய போதிலும், அது அவ்வாறான விடயம் அல்ல எனவும் விடுதலைப்புலிகள் பொருத்திய கண்ணி வெடியில் சிக்கியே அவர்கள் உயிரிழந்தனர் என்றும் கருணா தெரிவித்துள்ளார்.

இந்த திறமையான இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தானும் மோதல்களில் ஈடுபட்டதாகவும் இந்த இராணுவ அதிகாரிகள் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிலும் மரியாதை இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments: