Monday 18 August 2008

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எஸ்.பொ.வுக்கு"உலகப் பெருந்தமிழர் விருது'

உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா, உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக சனிக்கிழமை தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்றது.

இம்மாநாடு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றது.

மதுரை மாநகரில் உள்ள அரசடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்களான தி.க. சிவசங்கரன், கி. இராஜநாராயணன், எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.), ஜே.வி. கண்ணன், வே. தங்கவேலு (நக்கீரன்) ஆகியோருக்கு "உலகப் பெருந்தமிழர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி. மகேந்திரன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா, சிவாஜிலிங்கம்,கவிஞர்களான காசி ஆனந்தன், இன்குலாப், மணியரசன், தியாகு, க. நெடுஞ்செழியன், பேரா. ஜெயராமன், அழகிய பெரியவன், முனைவர் தமிழண்ணல், பேரா. பர்வீன் சுல்தானா, எழுத்தாளர்களான சூரியதீபன், மரு. இந்திரகுமார் (லண்டன்), கலைச்செல்வன் (மியான்மர்), மு. பாலசுப்பிரமணியம், சா. சந்திரேசன், இராசேந்திரசோழன், மெல்கியோர், பசுபதி பாண்டியன் உட்பட பல்வேறு கட்சிகளையும் அமைப்புக்களையும் சேர்ந்த எழுத்தாளர்களும் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் எழுச்சியூட்டும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழின உணர்வாளர்கள் பெருமளவிலானோர் பங்கேற்றனர்.

No comments: