Sunday 17 August 2008

மதவாச்சி சோதனைச்சாவடியில் ஜயலத் ஜயவர்தன பிரயாணம் செய்த வாகனம் சோதனையிடப்படவில்லையாம். பொலிஸ் சார்ஜன்ற், கான்ஸ்டபிள் பணிநீக்கம்

மடுத்திருப்பதியின் ஆவணி மாதத் திருநாளாகிய 15 ஆம் திகதி அங்கு சென்ற ஐ.தே.க முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஜயலத் ஜயவர்தன தமது பொலிஸ் மெய்ப்பாதுகாவலர்களுடன் மதவாச்சி சோதனைச்சாவடியைக் கடந்து சென்ற போது



அவரது வாகனத்தைச் சோதனையிடாததற்காக அங்கு கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ற் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பாதுகாப்பு அமைச்சின் அனுமதி உட்பட உரிய அனுமதிப் பத்திரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பொலிஸ் மெய்ப்பாதுகாவலர்களுடன் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக மடுவுக்குச் சென்றபோதும், அங்கிருந்து திரும்பி வந்தபோதும் அவருடைய வாகனம் சோதனை செய்யப்படாமைக்குப் பொறுப்பாக இருந்த பொலிசாரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதி இருந்தாலும், மதவாச்சி சோதனைச்சாவடியில் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட வேண்டும் என்ற உத்தரவு அனுராதபுரம் பிரதி பொலிஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரவைச் செயற்படுத்த தவறினார்கள் என்பதற்காகவே இந்த பொலிசார் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவி;க்கப்படுகின்றது.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக அரசாங்க உயர் மட்டத்தின் அனுமதியோடும், பாஸ் பெற்றும் பல முக்கியஸ்தர்கள் பிரயாணம் செய்கின்றார்கள், தேர்தல் பிரசாரங்களுக்குச் செல்லும் முக்கியஸ்தர்களும் இவ்வாறு செல்கின்றார்கள். இவர்களது வாகனங்களைச் சோதனையிடும்போது அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் கோபமடைகின்றார்கள். அத்துடன் ஜயலத் ஜயவர்தன நாடறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காகவே அவரது வாகனம் அனுமதிக்கப்பட்டது.


இந்த நிலையில் இவ்வாறு மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக தமது வாகனங்களில் பிரயாணம் செய்யலாம் என அரசாங்க உயரதிகாரிகளும், உயர் மட்;டத்தினரும் உரிய அனுமதியை வழங்குகிறார்கள்.


அவ்வாறான வாகனங்கள் சோதனையிடப்படவில்லை என்பதற்காக சாதாரண பொலிசார் தண்டிக்கப்படுவது ஏன் என பொலிசார் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

No comments: