Saturday, 2 August 2008

எதிர்வரும் நாட்களில் புலிகளின் பாரிய மோதல்களைத் தடுக்கமுடியாது -அத்தாஸ்


தமிழீழ விடுதலைப் புலிகள் “சார்க்” மாநாட்டை முன்னிட்டு அறிவித்திருந்த ஒருதலைப்பட்சப் போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தநிலையில் இலங்கைப் படையினர் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது.


எனினும் இதனைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள “சண்டே டைம்ஸின்” பாதுகாப்பு ஆய்வாளர் “இக்பால் அத்தாஸ்”தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதிகளில் வரும் நாட்களில் பாரிய மோதல்கள் இடம்பெறுவதைத் தடுக்கமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திடசங்கற்பம் கொண்டுள்ளமை இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

“சார்க்” மாநாட்டின் போது “ட்ரான்ஸ் ஏசியா” ஹோட்டலில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல,வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டார்.

அவருக்கு உதவியாக இராணுவ விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர். எனினும் இந்த நிகழ்வுக்கு சுமார் 200 ஊடகவியலாளர்களை எதிர்ப்பார்த்தபோதும் 30 பேரே வருகைதந்தனர்.

இதேவேளை துருப்பினர் மல்லாவியைக் கைப்பற்ற முனைந்த போதும் துணுக்காயைக் கைப்பற்றியபோதும் பாரிய எதிர்த் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனினும் அதனைப்பற்றி மேலதிகமாகத் தெரிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments: