Wednesday, 16 July 2008

விடுதலைப் புலிகளின் விடத்தல்தீவு முகாமை மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

மன்னார் விடத்தல்தீவு நகரப்பகுதியை இராணுவத்தின் 58 படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பட்டின்கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடமேல் கரையோரப் பகுதியில் மன்னாரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் விடத்தல்தீவு அமைந்திருப்பதாகவும்,


இங்கு விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்புலி முகாமாக அமைந்திருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர்

முதற்தடவையாக விடத்தல்தீவு விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் விடுவிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்புலிகளுக்கு மிகவும் முக்கியமான தளமாக விளங்கிய விடத்தல் தீவு முகாமின் வீழ்ச்சி அவர்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக விடத்தல்தீவு பகுதியில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும், இந்த மோதல்களில் 30ற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், கடற்புலிகளின் விடத்தல் தீவு முகாம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை.

No comments: