Friday, 4 July 2008

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீடுகளும் கட்டிடங்களும் இன்று முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன???

மடுப்பகுதிக்குள் செல்ல எமக்கே இன்னமும் அனுமதியில்லை மாதாவின் திருச்சுருபத்தை எப்படி கொண்டு வருவது?
யுத்தத்தினால் ஒருபோதும் நன்மை வரப்போவதில்லை. அழிவுகளே மிஞ்சும். தமது வாழ்நாள் பூராகவும் கஷ்டப்பட்டு வாழ்வையே அர்ப்பணித்து கட்டிய இல்லங்கள் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மக்கள் இன்று யுத்தத்தால் இழந்து நிற்கின்றார்கள்.

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீடுகளும் கட்டிடங்களும் இன்று முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுறுகின்றேன்.

இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது. யார் இதனைக் கட்டித்தரப் போகின்றனர் என்ற கவலையால் தினமும் வேதனை கொள்கின்றேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.


பேட்டி விபரம் வருமாறு:

கேள்வி: யுத்தம் உக்கிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில் இறைபணிக்கு மேலதிகமாக பல்வேறு பணிகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகின்றோம். அந்தப் பணிகள் யாவை என எமது மக்கள் அறியவிரும்புகின்றனர் சற்று விபரமாக கூறுங்கள்?

பதில்: நான் மட்டுமல்ல என்னுடைய அனைத்து குருக்கள்மாரும் உதவியாளர்களும் இந்த காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது பணிகளை ?ன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் சிறப்பாக ஆன்மிகப் பணிகளை செய்து வருகின்றோம்.

ஏனெனில், ஆன்மிகப்பணிகள் தான் துன்பங்கள், துயரங்கள் மத்தி யிலே மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி இன்றைய காலகட்டத்தில் மக்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், போராட்டங்களின் மத்தியிலே நாங்கள் அவர்களுடன் இருக்கின்றோம். சிறப்பாக மக்களின் அன்றாடத் தேவைகளை அவர்களின் துன்பங்கள் துயரங்களை உயரதிகாரிகளிடம் எடுத்துச் சென்று விடுதலையை நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க இயன்றவரை முயற்சித்து வருகின்றோம்.

மனித உரிமை மீறல்கள், மக்களுடைய அலைக்கழிப்புக்கள், அகதிமுகாம் வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்வி வசதியின்மை போன்ற பல்வேறு கஷ்டங்களால் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றவேளை சிறப்பாக இந்த போர்க்காலச் சூழலில் அவர்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக பெரும்பணி ஆற்றி வருகின்றோம்.

இந்த நாட்டிலுள்ள துன்பத்திற்கெல்லாம் போர் என்ற இந்த அரக்கனே காரணமாக இருக்கின்றது. ஆகவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றை நீக்க முயற்சி எடுப்பதன் வாயிலாக போரை நாங்கள் முடிவிற்கு கொண்டுவரலாம்.

ஒரு பகைவனைக் கொல்லுவதனாலே எந்தப் பிரச்சினையும் முடிவிற்கு வந்துவிடப் போவதில்லை.

பகைமையை நாங்கள் தோற்கடிக்க வேண்டும்.

அதனால், பகைவனைத் தோற்கடிக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாங்கள் அரசாங் கத்துடனும் விடுதலைப்புலிகளுடனும் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகின் றோம். அண்மையில் கூட நான் சர்வமத அமைப் பில் சேர்ந்திருக்கின்றேன். அது இலங்கையில் மட்டுமன்றி உலக ரீதியாகவும் முன்னெடுக்கப்ப டுகின்ற முயற்சியாகும். நாட்டில் சமாதானத்திற் காக நான்கு சமயங்களைச் சேர்ந்தவர்களும் அதிலே அங்கத்துவம் வகிக்கின்றனர்.

கத்தோலிக்க திருச்சபை இதிலே முக்கியமாக பங்களிப்புச் செய்கின்றது. ஏனைய கிறிஸ்தவ சபைகளும் அதில் அங்கம் வகிக்கின்றன. மக்க ளின் துன்பங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், நடக்கின்ற அநியாயங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றோம்.

கேள்வி: சர்வ மதத் தலைவர்களின் அமைப்பில் நீங்களும் ஒரு அங்கத்தவராக இருக்கின்றீர்கள்.

இந்த அமைப்பின் பணிகள் யாவை?

பதில்: சர்வ மதத் தலைவர்களின் அமைப்பு இலங்கை சமயத் தலைவர்களின் மன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதனுடைய நோக்கம் என்ன வென்றால் இந்த நாட்டில் சமாதானத்தை விரும் புகின்றவர்கள் தற்போதுள்ள குழப்பமான சூழ்நி லையில் பகைவனை வெல்ல வேண்டுமென் றால் பகைமையை வெல்ல வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு அமைய நாங்கள் செயற்படுகின் றோம்.

அதனடிப்படையில் நாம் செயற்படும் போது படிப்படியாக தற்பொழுது நாட்டில் வாழ் கின்ற மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லி அந்த பிரச்சினைகளை எவ்வளவிற்கு குறைத்து மக்களின் சகவாழ்வாக மாற்ற முடி யுமோ அவ்வளவிற்கு அவர்களை செய்ய வேண் டுமென்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற இவ்வேளை யிலே மக்களின் அத்தியாவசிய தேவைகளும் அவர்களுடைய வாழ்வினுடைய வளங்களும் குன்றாதிருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளும் படி நாம் கேட்டுக் கொள்கின்றோம். ஏனென் றால், மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றா ர்கள். குறிப்பாக வடஇலங்கையிலே வாழ்கின்ற மக்கள் அகதிகளாக்கப்பட்டு ஆயிரக் கணக்கிலே அவர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு நாளை என்ன நடக்கும், எங்கு போய் தங்குவது, எவரிடம் போய் கையேந்துவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

குறிப்பாக வன்னிப் பகுதியில் தற்பொழுது இராணுவ நடவடிக்கை நடைபெறுவதனால் ஒரு விதமான நம்பிக்கை இல்லாத பயணத்தில் பத்து பதினைந்து தடவைகள் திரும்பத் திரும்ப இடம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, எங்களுடைய ஒரு முயற்சியாக வன்னிக் குள் இருக்கும் மன்னார் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்குள்ளே சமாதான பிராந்தியங்களை ஏற்படுத்தி இந்த சண்டை நேரத் தில் அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பாக இரு ப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டு ம். ஐ.நா. அதிகாரிகள் அதற்கு அடிகோல வேண் டுமென்று நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதியை சந்தித்த போதும் அவரிடம் சென்று மக்கள் அனுபவிக்கின்ற அன்றாட துன்ப ங்களை பற்றி சொல்லியிருக்கின்றோம். மக்கள் காணாமல் போகின்றமையும் சடலங்களாக வந்து வீசிவிட்டு போகின்றமையும் அடுத்தது எந்தவித மான விசாரணைகளும் இல்லாமல் கொல்லப்ப டுகின்றமையும் இப்படியான ஒரு அவல நிலையை மக்கள் சந்தித்து கொண்டு இருக்கிறார் கள்.

இலங்கையில் எல்லா இடங்களிலும் கொழும்பிலும் கூடத்தான் இவை நடந்து கொண் டிருக்கின்றன. கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியில் கடைசி ஒரு வாரத்தில் 4 பேர் காணா மல் போயுள்ளனர். வர்த்தகர்கள் சுட்டுக் கொல்ல ப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள். மன்னார் மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்திலும் கிழக்கிலும் தொடர்ந்து இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படி எங்கள் சொந்த மக்களுடைய இரத்தம் சிந்தி அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித மான நம்பிக்கையும் இல்லாமல் இருக்கின்ற நிலைமையை உருவாக்கக் கூடாது. சமயத் தலை வர்கள் இந்த நாட்டிலே மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். மக்களுடைய சிந்தனைகளை திருப்பக் கூடியவர்கள்.

சகல மக்களோடும் சேர்ந்து அவர்களை தயார் செய்து சமாதானத்திற்கான சிந்தனைகளை அவர்களிடத்தில் புகட்டி தலைவர்களிடத்தில் சென்று எங்களுடைய நோக்கத்தை எடுத்துக்கூறி வருகின்றோம். இதன் வழியாக எங்களால் இயன்றளவு சமாதானத்தை காணவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகின்றோம்.

கேள்வி: மன்னார் மாவட்டத்தில் தற்போது நிலைமைகள் எவ்வாறு காணப்படுகின்றன?

பதில்: முசலிப் பகுதியைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் பேர் அரச படையினரால் உடனடியாக வெளியேற வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டதனால் அவர்கள் எல்லாப் பொருட்களையும் அவர்களுடைய வலைகள், படகுகளையும் விட்டு கையில் கொண்டு செல்லக்கூடிய பொருட்களை மட்டும் தூக்கிக் கொண்டு செல்ல நேரிட்டது.

ஏனெனில் அவர்கள் நடந்துதான் போகவேண்டும். ஆற்றைக் கடந்து போக வேண்டும்.

ஆகவே, அவர்களால் ஒன்றையும் பெ?தாக எடுத்துக்கொள்ள முடியாமல் போனது. அவர்கள் விடுவிக்கப்பட்ட முசலிப் பகுதி கிராமத்தில் போய் இருக்கிறார்கள். அங்கு ஒருவரும் இல்லை.

ஆகவே, அந்த மக்கள் சொல்லொணா துன்பம் அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு உழைப்பிற்குரிய வசதியில்லை. தங்குவதற்கு வசதிகள் இல்லை. சின்ன கொட்டில்களில்தான் இருக்கிறார்கள். இந்த வருடத்தில் பங்குனி, சித்திரை மழை வந்து மிகவும் மோசப்படுத்தி விட்டது. போன வருடம் செப்டெம்பரில் அவர்கள் இடம்பெயர்ந்தனர். அதன் பிறகு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை மூன்று மாதத்திற்கு நீடித்த மழையினால் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருத்தங்களுக்கும் நோய்களுக்கும் குறிப்பாக பிள்ளைகள் அதிகமாக தொற்று நோய்களுக்கும் உட்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய கல்வி மற்றும் ஒழுக்கம் பாழாகப் போகின்ற நிலைமை காணப்படுகின்றது.

கிராமத்தினுடைய கட்டுப்பாடு இல்லாத நிலையில் சமய அனுட்டானங்களை பின்பற்ற முடியாமல் ஒழுக்கக் கட்டுப்பாடு சீர்குலையும் நிலை தோன்றியுள்ளது.

இப்படியான ஒரு நிலையில் இந்த தமிழ் மக்களின் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகவுள்ளது. ஆகவே, அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு சென்று கிராமங்களின் கட்டுக்கோப்பிற்கு அமைய அவர்கள் தொடர்ந்தும் பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்பது கண்டிப்பான தேவையாக உள்ளது.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் இழந்துள்ளார்கள். அன்றாடம் கொடுக்கப்படுகின்ற உணவுகளைத்தான் அவர்கள் உண்ண வேண்டியிருக்கின்றது. சில வேளைகளில் சிலர் தொழிலுக்கு போகக் கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல முசலிப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் அந்தக் காலத்தில் இப்பகுதி விடுதலைப்புலிகள் பிரதேசமாக இருந்ததினால் அவர்களின் கீழ் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்களினால் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் இந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ பயிற்சிக்கு போயுள்ளனர். ஆனால், தற்பொழுது யார் யார் பயிற்சிக்கு சென்றார்கள் என்று கேட்டு அவர்களை முகாமிற்கு வரச்சொல்லி துன்பப்படுத்துவதும் வழமையாகி விட்டது.

25 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு உணவு பொருட்களை கொடுத்திருந்தா லும் கூட அவர்கள் அடையாளம் காணப்படுவதுடன் காணாமல் போகும் நிலைமை இந்த அகதிகள் மத்தியில் தோன்றியுள்ளது. வன்னிக்குள் கிட்டத்தட்ட 40000 பேர் இடம்பெயர்ந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்படாத இடம் என்று சொல்லக்கூடிய மன்னார் மாவட்டத்தின் அந்த பகுதிகளில் இருந்த சுமார் 39000 பேர் மல்லாவி, வன்னிப் பகுதிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அங்கு போனாலும் அவர்களுக்கு எவ்வளவு தூரத்திற்கு பாதுகாப்பு இருக்கும் என்பது தெரியாது. ஆகவே, பெரிய ஒரு அங்கலாய்ப்போடுதான் அவர்களும் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் இருக்கின்ற மக்கள் அவ்வளவு பேருக்கும் எல்லா வீடுகளும் தரைமட்டமாகிப் போய்விட்டன.

அங்கு ஒன்றுமே கிடையாது. ஆகவே, அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கூறமுடியாதுள்ளது. அவர்கள் வாழ்க்கை முழுவதும் தேடி சம்பாதித்து கட்டிய வீடுகள் தரைமட்டமாகிப் போயுள்ளன.

பாடசாலைகள், கோயில்கள் எல்லாம் சேதமடைந்து விட்டன. இப்படியான நிலைமைதான் அங்கு காணப்படுவதாக கேள்வியுற்றேன்.

ஆனால், நேரில் சென்று பார்வையிடவில்லை.

ஆகவே, இப்படியானதொரு நிலையில் யார் இவற்றைக் கட்டிக்கொடுக்கப்போகின்றனர். இந்த மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்போவது யார்? எப்பமுடியப்போகிறது? யார் வரப்போகின்றனர்? என்று மக்கள் அங்கலாய்ப்புடன் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நான் அந்தப் பகுதிக்கு எட்டுக் குருக்கள்மாரை அனுப்பி மக்கள் மத்தியில் பணிசெய்து வருகின்றோம்.

அவர்களுடன் இருந்து இந்த இக்கட்டான தருணத்தில் நம்பிக்கையை ஊட்டி வருகின்றோம்.

மன்னாரிலிருந்தும் குருக்கள்மார் சென்று மக்களை வீடுகளில் சந்தித்து நான்கு ஐந்து நாட்களுக்கு அவர்களோடு வழிபாடுகளை நடத்தி அவர்களை ஊக்கப்படுத்துகின்றோம். எந்த மதத்தைச் சேர்ந்தாலும் எல்லா மக்களும் எமக்கு தேவையானவர்கள். எமது சமூகப்பணிமூலம் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றோம்.

கேள்வி: மடுப்பிரதேசம் தற்போது இராணுவத்தின?ன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் அங்கே திருச்சுருபத்தை மீண்டும் கொண்டு வருவதற்கோ திருவிழாவை நடத்துவதற்கோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தென்பகுதி ஊடகங்கள் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இதன் உண்மையான நிலைமை என்ன?

பதில்: இரண்டு பகுதியும் போராடிக் கொண்டிருந்தால் திருச்சுருபத்தை நாங்கள் மடுவில் வைத்திருக்கமுடியாது. ஏனென்றால் அங்கு ஆபத்திருந்தது. வீட்டு வளாகத்திலேயே அருட் தந்தையர்கள் வாழ்கின்ற அறை, வீடுகளிலேயே அவர்களது சாப்பாட்டு அறைகளிலேயே ஷெல் வந்து விழுந்தது.

அங்கு ஆபத்தான நிலை காணப்பட்டது. கடைசியிலே அங்கே நான்கு அருட் தந்தையர்களை ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு இருக்கும்படி விட்டிருந்தேன். இவர்களைத் தவிர அருட் சகோதரிகள் மூவர் உட்படஏழுபேர் அங்கு இருந்தார்கள். கடைசிக் கட்டத்தில் அங்கு இருக்க முடியாத பேராபத்தான சூழ்நிலை. எல்லா இடமும் ஷெல் வீச்சுக்கள். எழும்பிப் போக முடியாத நிலையில் பதுங்கு குழிக்குள் இருந்துவிட்டு கடைசியாக 3 ஆம் திகதி திருச்சுருபத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வேறிடத்திற்கு போனாõர்கள்.

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர்கள் வாழ்கின்ற அந்தப் பகுதியை எழு பங்குகளாக பிரித்துள்ளனர். அதில் ஆறு பங்குகளிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர். ஏழாவது பங்கான மன்னாருக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தேவன்பிட்டி என்ற பங்கில் தான் மக்கள் இருந்தார்கள். அங்கு தான் சுருபத்தை வைத்திருக்கின்றோம். மக்களோடு மாதாவும் இடம்பெயர்ந்த அவலம் நடைபெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெயர்ந்த மக்கள் மாதாவிடம் தான் ஓடி வந்தனர். இப்போது மாதா அவர்களைப் போய்த்தேடி அங்கே இருக்கின்றார். நான் திரும்பவும் சுருபத்தை கொண்டு வருவதாக இருந்தால் மடுவிற்கு தான் கொண்டு வருவேனே தவிர வேறு எங்கேயும் கொண்டுபோய் வைத்திருந்துவிட்டு திரும்பி மடுவிற்கு கொண்டு வரமாட்டேன். மடுவிற்கு கொண்டுவருவதாக இருந்தால் முதலில் எங்களை விட வேண்டும். இராணுவத்தினர் மடு பிராந்தியத்தை கைப்பற்றிய பின்னர் எங்களையே அங்கு விடவில்லை.

இதுவரையில் அருட்தந்தையர் ஒருவரை ஒரு முறை அங்கு அழைத்து சென்று 45 நிமிடம் சுற்றி காட்டிவிட்டு அனுப்பியிருந்தார்கள். நான் அங்கு போகவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கு இன்ன?ம் அனுமதி தரவில்லை. மடுவிற்கு பொறுப்பான அருட்தந்தை அடங்கலாக மூன்று அருட்தந்தைமார்களதும் எங்களுக்கு உதவி செய்யக்கூடியதாக அங்கு திருத்த வேலைகளை செய்யக்கூடியதாக நான்கு பேர்களதும் பெயர்களை அடையாள அட்டை இலக்கம் சகிதமாக கொடுத்திருந்தோம்.

எனினும், இரண்டு மாதங்களாகியும் அங்கு போவதற்கு பாதுகாப்பு காணாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இன்னும் ஒரு பதிலும் வரவில்லை. ஆகவே, முதலில் நாங்கள் அங்கு போக வேண்டும். எங்களுக்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.

ஆலயம் ஷெல் விழுந்து உடைந்து கிடக்கிறது.

அதனைத் திருத்த வேண்டும். கிணறுகளை எல்லாம் துப்புரவாக்க வேண்டும். ஷெல் விழுந்து முதலைகள் எல்லாம் இறந்து கிடக்கும் குளங்களை துப்புரவு செய்ய வேண்டும்.

தண்ணீர் வசதிகளை பார்க்க வேண்டும். மின்சார வசதிகளை பார்க்க வேண்டும். மலசலகூட வசதிகளை நாம் பார்க்க வேண்டும். இவற்றை செய்வதற்கு சில நாட்கள் செல்லும். இவற்றை எல்லாம் செய்தால் தான் நாம் சுருபத்தை கொண்டு வரமுடியும்.

மக்கள் வந்து தங்கும் விடுதிகளில் கண்ணிவெடி இருக்கக்கூடும். அவற்றை அகற்ற வேண்டும். மடு வீதியால் தான் மடுத்திருத்தலத்திற்கு போக வேண்டும். அந்த வீதியிலும் கண்ணிவெடி இருக்கக்கூடும். அவற்றையும் அகற்ற வேண்டும். இதையெல்லாம் அகற்றித் தந்தால் தான் மடு மாதா திருவிழாவை அங்கு நடத்தமுடியும்.

அதற்கு முதலில் அங்கு எங்களைப் போகவிட்டு நாங்கள் திருத்த வேலைகளை செய்யமுடியுமாக இருந்தால் திருச்சுருபத்தை அங்கு கொண்டுவந்து வைப்÷பாம். அதன் பிற்பாடு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அது மட்டுமன்றி அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் மடுமாதாவை சுற்றியுள்ள இரண்டரைக் கிலோமீற்றர் பகுதியை சமாதான வலயமாக, யுத்த சூனிய பிரதேசமாக கருதி மதித்து எழுத்து மூலம் எமக்கு உறுதி தர வேண்டும். இருதரப்பினரும் இது தொடர்பில் நல்ல மனத்துடன் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.

மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து இரண்டரைக் கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கப்போவதாக படையினர் ஏற்கனவே எழுதித் தந்துள்ளனர்.

அவர்கள் மடுவிற்குள் இல்லை. ஏற்கனவே வெளியே தான் இருக்கிறார்கள். அதேபோல விடுதலைப்புலிகளுடன் சென்று பேசி அவர்களது அதற்கான முழு ஒத்துழைப்பையும் கிடைக்கும் என நம்பியிருக்கின்றோம். ஆகவே, இது எல்லாம் நடந்தால் நாங்கள் திருவிழாøவ நடத்தலாம். மக்களை நாங்கள் ஆபத்தான சூழலில் கூட்டிக்கொண்டு வந்து திருவிழாவை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த வருடம் திருவிழா நடக்கும் என்று நிச்சயமாக கூறமுடியாது. ஆடித் திருநாள் இரண்டாம் திகதி நடக்க வேண்டும். அது நடக்கவில்லை.

ஆவணித் திருநாள் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவேண்டுமானால் அதற்குரிய ஆயத்தங்களை ஆறாம் திகதி தொடக்கம் செய்ய வேண்டும்.

ஆகவே, அதுவும் சாத்தியப்படாது என்று தான் நான் நினைக்கின்றேன். எங்களுக்கு இன்னும் அனுமதி தரவில்லை. எப்போது தருவார்கள் என்றும் தெரியவில்லை.

ஆவணிக்கு பின்னர் ஒக்டோபர் மாதத்தில் தான் அங்கு திருவிழா இருக்கின்றது. செபமாலை மாதா திருவிழா நடைபெறுவதுண்டு. சூழ்நிலை சாதகமாக அமைந்தால் நாங்கள் அதனைக் கொண்டாடக்கூடும். மக்கள் வராவிட்டாலும் திருப்பலி ஒப்புக்கொடுத்து அதனை நாங்கள் கொண்டாடக்கூடும். அதன் பிறகு அடுத்த வருடத்தில் எல்லாம் சுமுகமாக நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

No comments: