Wednesday 16 April 2008

சுருட்டு சாமியார், காதலி பெண் டாக்டர் தற்கொலை!

Palanisamy
சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும், சுருட்டு சாமியார் என்றழைக்கப்பட்டவருமான பழனிச்சாமியும், அவர் 3வது கல்யாணம் செய்து கொண்ட பெண் டாக்டர் திவ்யாவும் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார்.

இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந் நிலையில் தன்னிடம் குறி கேட்க வந்த பெண் ஹோமியோபதி டாக்டர் திவ்யாவுடன், பழனிச்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திடீரென கல்யாணம் செய்து கொண்டனர். இந்தக் கல்யாணத்திற்கு 2வது மனைவி மணிமேகலை ஆதரவாக இருந்தார்.

மேலும் கல்யாணத்திற்குப் பிறகு திவ்யா, பழனிச்சாமியின் ஆசிரமத்திற்கு வந்து தங்கினார். திவ்யாவின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து முகப்பேர் காவல் நிலையத்தில் திவ்யாவின் தந்தை புகார் கொடுத்தார். அதில் பழனிச்சாமி தனது மகளை மயக்கி கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந் நிலையில் பழனிச்சாமியும், திவ்யாவும் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். ஆனால் டெல்லி சென்று விட்ட இருவரும் பின்னர் மீண்டும் சென்னை திரும்பினர். திவ்யா மட்டும் சென்னைக்கு திரும்ப, சென்னைக்குள் வராமல் வெளியூருக்குப் போய் விட்டார் சாமியார் பழனிச்சாமி.

இதையடுத்து அவரை வலை வீசித் தேடிய போலீஸார் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கத்தில் வைத்து கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பிறகு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஆனால் சாமியார் வரும் வரை எங்கும் போக மாட்டேன் என்று கூறிய திவ்யா, ஆசிரமத்தில் தங்கியிருந்து பூஜைகள் செய்து வந்தார்.

இந் நிலையில் திவ்யாவுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரமத்திலிருந்து வெளியேறி விடுதியில் தங்கிக் கொள்வதாக திவ்யா தெரிவித்தார். அதன்படி திவ்யா ஆசிரமத்திலிருந்து வெளியேறினர்.

இந் நிலையில் கடந்த மாதம் பழனிச்சாமி ஜாமீனில் விடுதலையானார். கோர்ட் நிபந்தனையின்படி வெளி மாநிலம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து அவருடன் மீண்டும் திவ்யா இணைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஜோடியாக மடிப்பாக்கம் வந்தனர். அங்கு நள்ளிரவில் பூஜைகள் செய்தனர். இதை அப்பகுதி மக்கள் வீடியோவில் படம் எடுத்தனர்.

இந் நிலையில் சிட்லப்பாக்கத்தில் உள்ள மணிமேகலையின் வீட்டுக்கு பழனிச்சாமியும், திவ்யாவும் சென்று தங்கினர்.

இன்று காலை இருவரும் வீட்டில் பிணமாக கிடந்தனர்.பள்ளிக்கரணை போலீஸார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணிமேகலையிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனிச்சாமி மற்றும் திவ்யாவின் திடீர் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

ttpian said...

where r they now? Heaven r Hell?